உபேர் நிறுவனம் மீது கடுப்பில் டிரைவர்கள்: வேலைநிறுத்தத்தில் குதிக்கும் சூழல்
பெங்களூர்: உபேர் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதால் டிரைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பெங்களூரில் செயல்படும் உபேர் டாக்சி நிறுவனத்தில் பணிபுரியும் டிரைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். உபேர் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதாகவும் தங்களை கண்டுகொள்வது இல்லை என்றும் டிரைவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
வாடிக்கையாளர்கள் புகார் அளித்தால் அவர்கள் தரப்பு நியாயத்தை மட்டுமே நிறுவனம் கேட்கிறதே தவிர தங்கள் தரப்பு நியாயத்தை கேட்பதே இல்லை என்கிறார்கள் டிரைவர்கள். மேலும் வாடிக்கையாளர்கள் குறைவான ரேட்டிங் அளித்தாலும், தொடர்ந்து யார் மீதாவது புகார் அளித்தாலும் அந்த டிரைவர்களை உபேர் நிறுவனம் பணிநீக்கம் செய்து வருவதும் அவர்களுக்கு பிடிக்கவில்லை.
போதிய ஆவணங்கள் அளிக்காதவர்கள் அல்லது வாடிக்கையாளர்களுடன் பிரச்சனை செய்தவர்களை தான் பணிநீ்க்கம் செய்துள்ளதாக உபேர் நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். நிறுவனத்தின் மீது அதிருப்தியில் உள்ள டிரைவர்கள் இன்று வேலைநிறுத்தம் செய்யக்கூடும் என்று கூறப்பட்டது. ஆனால் டிரைவர்கள் இன்று வழக்கம் போன்று பணிக்கு வந்துள்ளனர்.
உபேர் நிறுவனத்தில் சேரும் டிரைவர்களுக்கு இலவசமாக செல்போன் தருகிறார்கள். ஆனால் அதற்கான இன்டர்நெட் கட்டணமாக வாரம் ரூ.300 பிடித்துக் கொள்கிறார்கள் என்று டிரைவர்கள் குமுறுகிறார்கள்.