12 ஆண்டுகளுக்குப் பிறகு பொத்துகிட்டு ஊத்தும் வானம்.. மும்பைவாசிகளுக்காக ஓலா, உபேர் இலவச சவாரி!!
வர்த்தக நகரமான மும்பை நீரில் தத்தளித்து வருவதால் ஓலா, உபேர் கார் நிறுவனங்கள் இலவச சவாரிகளையும், சலுகைகளுடன் கூடிய பயணத்தையும் வழங்கி வருகின்றன.
மும்பை : மும்பையில் 12 ஆண்டுகளில் இல்லாத மழை பெய்வதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர், இதனால் உபேர், ஓலா போன்ற கார் நிறுவனங்கள் மக்களுக்கு இலவச சவாரிகளை அறிவித்துள்ளனர்.
நாட்டின் வர்த்தக நகரமான மும்பையில் 12 ஆண்டுகளில் இல்லாதவகையில் பொத்துகிட்டு வானம் மழையை ஊற்றுகிறது. இதனால் மும்பை நகரின் பெரும்பாலான சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. அலுவலகம், மருத்தவமனை, பள்ளி என எங்குபார்த்தாலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. சாலைகளிலும் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இன்றும் மழை நீடிக்கும் என்பதால் மக்கள் தங்களது வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எனினும் வீட்டிற்கு செல்லமுடியாமல் தவித்து நிற்கும் மக்களுக்கு உபேர், ஓலா நிறுவனங்கள் இலவச சவாரிகளை அறிவித்துள்ளன.
இலவச கூட்டு சவாரி
உபேர் நிறுவனம் இலவச உபேர் பூல் சவாரிகளை மும்பை மக்களுக்காக அறிமுகம் செய்துள்ளது. "MUMBAIRAINS" என்ற புரமோ கோட் இதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. உபேர் ஆப்பில், பேமெண்ட் பிரிவிற்கு சென்று புரமோ பகுதியை தேர்வு செய்தால் அதன் மூலம் மக்கள் இலவச கூட்டு சவாரியை பெற முடியும்.
ஷட்டில் சர்வீஸ்
இதே போன்ற நாட்டிலேயே அதிக கார் சர்வீஸ்களைக் கொண்ட ஓலா ஷட்டில் சர்வீஸை அறிமுகம் செய்தள்ளது. ஷட்டில் சர்வீஸின் சிறப்பு என்னவென்றால் புக் செய்யாமலே மும்பையின் எல்லா பகுதிக்கு சவாரி செய்யலாம். போவாய் ஹிராநந்தினி - பயந்தர் வழியாக வெஸ்டர் எக்ஸ்பிரஸ் ஹைவே, பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் - பயந்தர் வழியாக வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஹைவே, உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து - தானே வழியாக ஜேவிஎல்ஆர் மற்றும் ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
"சர்ஜ்" கட்டணம் நீக்கம்
இதே போன்று ஓலா மற்றும உபேர் நிறுவனங்கள் சர்ஜ் கட்டணத்தை நீக்குவதாக தெரிவித்துள்ளன. மேலும் வெள்ளம் காரணமாக கேப்கள் பிக் அப் இடத்திற்கு வர காலதாமதம் ஏற்படலாம் என்றும் கூறியுள்ளன.
உதவிக்கரம்
கனமழை காரணமாக ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. சரியான வானிலை இல்லாததால் சில விமான சேவைகள் தாமதப்படுத்தப்பட்டுள்ளன. மழையால் வீடு செல்ல முடியாமல் சில ஊழியர்கள் தங்கள் அலுவலகங்களிலேயே தங்கியுள்ளனர், அவர்களுக்கு அந்தந்த நிறுவனகள் உணவு உள்ளிட்ட வசதிகளை செய்து தருகின்றன. இதே போன்று மழையில் சிக்கிக் கொண்டவர்களுக்கு குடியிருப்பு வாசிகள் தங்கள் வீடுகளில் இடம் தந்து தங்கவைத்துள்ளனர்.