உதய்பூர் கொலையாளிகளுக்கு அடி, உதை.. ”சட்டையை” கிழித்து சட்டத்தை கையில் எடுத்த வழக்கறிஞர்கள்
ஜெய்பூர்: ராஜஸ்தானில் பாஜகவை சேர்ந்த நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பதிவிட்டதாக கூறி தையல்காரரின் தலையை துண்டித்து படுகொலை செய்தவர்கள் நீதிமன்ற வளாகத்திலேயே தாக்கப்பட்டனர்.
பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அதில் பேசிய நுபுர் ஷர்மா இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசினார். அதேபோல் அக்கட்சியின் நவீன் குமார் ஜிண்டாலும் முஹம்மது நபி குறித்து ட்விட்டரில் அவதூறாக கருத்திட்டார்.
உதய்பூர் கொலையாளி பாஜகவை சேர்ந்தவரா? காங். வெளியிட்ட பகீர் படங்கள்! பாஜக திட்டவட்டமாக மறுப்பு
நுபுர் ஷர்மா தலைமறைவு
நுபுர் ஷர்மாவின் இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. மும்பையில் நுபுர் ஷர்மா மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் மும்பை போலீஸ் திட்டமிட்டு இருக்கிறது. இதேபோல் டெல்லி, கொல்கத்தா போலீசும் நுபுர் சர்மா மீது வழக்குப்பதிவு செய்து இருக்கிறது. ஆனால், அவர் தலைமறைவாகி இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
உலக நாடுகள்
இந்த நிலையில் நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குறிய பேச்சு அரபு நாடுகளிலும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சவூதி அரேபியா, ஈரான் அமீரகம், குவைத், கத்தார், ஓமன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நாடுகள், இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு ஆகிய இந்தியாவில் நடக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும், பாஜக பிரமுகரின் பேச்சுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். அரபு நாட்டு மக்கள் ட்விட்டரில் #Boycott India என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் டெய்லர்
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள மால்டாஸ் பகுதியில் வசித்து வரும் கண்ணையா லால் என்ற டெய்லர் நுபுஷ் ஷர்மாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருக்கிறார். இதனால் அவரை முஹம்மது ரியாஸ் அக்தர், முஹம்மது கவுஸ் ஆகியோர் தலையை துண்டித்து கொலை செய்ததுடன், வீடியோ பேசியும் வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலையை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் 144 தடை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
பாஜக நிர்வாகிகளுடன் தொடர்பு
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட ரியாஸ் அக்டாரிக்கும் பாஜகவுக்கு தொடர்பு இருப்பதாக தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டது. ராஜஸ்தான் பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர்களுடன் ரியாஸ் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டதும், பாஜகவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட புகைப்படங்களும் வெளியாகின. அவர்கள் பாஜக சிறுபான்மை பிரிவில் சேர விரும்பியதாகவும் பாஜக தலைவர் பேசிய வீடியோ வெளியானது. இதுகுறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், பாஜக அதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளது.
என்.ஐ.ஏ வழக்கு விசாரணை
இந்த வழக்கை கையில் எடுத்து விசாரித்து வரும் என்.ஐ.ஏ. போலீசார், கைதான 4 பேரையும் இன்று ஜெய்பூரில் உள்ள என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் 4 பேரையும் என்.ஐ.ஏ. கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது. நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புக்கு இடையில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் நீதிமன்ற வளாகத்திலேயே கும்பலாக தாக்கப்பட்டனர். அவர்களின் சட்டைகளும் கிழிக்கப்பட்டன. அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் "பாகிஸ்தான் முர்தாபாத், தூக்கு தண்டனை வழங்குக" என்று முழக்கமிட்டனர்.