பாஜகவுடனான கூட்டணி உடைந்த பிறகு ராஜ் தாக்கரேவுடன் கூட்டணிக்கு சிவ சேனா முயற்சி
மும்பை: பாஜவுடனான 25 ஆண்டு கால கூட்டணி உடைந்ததை அடுத்து சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனது உறவினரும், மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா தலைவருமான ராஜ் தாக்கேரவுடன் தொலைபேசி மூலம் பேசியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு விவகாரத்தில் பாஜக, சிவ சேனா இடையேயான கூட்டணி உடைந்தது. கடந்த 25 ஆண்டுகளாக வலுவாக இருந்த இந்த கூட்டணி தற்போது உடைந்துள்ளது.
இந்நிலையில் சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனது உறவினரும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா நவநிர்மன் சேனாவின் தலைவருமான ராஜ் தாக்கரேவுடன் வெள்ளிக்கிழமை தொலைபேசி மூலம் பேசியுள்ளார். இரண்டு வாரங்களில் அவர் இரண்டாவது முறையாக ராஜுடன் பேசியுள்ளார்.
இந்த செய்தியை சிவ சேனாவும், மகாராஷ்டிரா நவநிர்மன் சேனாவும் மறுத்தாலும், தாக்கரே குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவர் இது உண்மை தான் என்று உறுதிப்படுத்தியுள்ளார். இந்த தொலைபேசி உரையாடல்கள் புதிய கூட்டணி குறித்தும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பால் தாக்கரேவை அடுத்து ராஜ் தாக்கரே தான் அக்கட்சியின் தலைவர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பால் தாக்கரே தனது மகன் உத்தவை தலைவர் ஆக்கினார். இதனால் ராஜ் கட்சியை விட்டு விலகி மகாராஷ்டிரா நவமநிர்மன் சேனாவை துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.