முஸ்லிம்களின் வாக்குரிமை சர்ச்சை.. "வாயாடி" சஞ்சய் ராவுத்துக்கு உத்தவ் தாக்கரே ஆதரவு
மும்பை: முஸ்லிம்களின் வாக்குரிமை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த சஞ்சய் ராவுத் எம்.பி.க்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆதரவு தெரிவித்துள்ளார்.
சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவுத். டெல்லி நாடாளுமன்ற எம்.பியான இவர் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான "சாம்னா"வின் நிர்வாக ஆசிரியராகவும் இருக்கிறார்.
இந்த நிலையில், முஸ்லிம்களின் வாக்குகளை திரும்ப பெற வேண்டும் என்று அவர் சமீபத்தில் சாம்னாவின் தலையங்கத்தில் குறிப்பிட்டார். அவரது கருத்துக்கு காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
தன்னுடைய கருத்தை ஊடகங்கள் திரித்து வெளியிட்டு விட்டதாக சஞ்சய் ராவுத் எம்.பி., குறிப்பிட்டபோதும், அவரை பற்றிய சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. இந்தநிலையில், முஸ்லிம்களின் வாக்குரிமையை திரும்ப பெற வேண்டும் என்ற சஞ்சய் ராவுத் எம்.பி.யின் கருத்துக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆதரவு தெரிவித்துள்ளார்.
அதில், "அரசியல் ஆதாயங்களுக்காக முஸ்லிம்களை சுரண்டுபவர்கள், முஸ்லிம்களுக்கு வாக்குரிமை இல்லை என்றால் அவர்களை அணுகுவார்களா? முஸ்லிம்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் ஒருபோதும் கூறியதில்லை.
அவர்கள் அரசியல் கட்சியினரால் எப்படி எல்லாம் சுரண்டப்படுகிறார்கள் என்பதை தான் முன்னிலைப்படுத்தி பேசுகிறோம். முஸ்லிம்களுக்கு மட்டும் வாக்குரிமை இல்லை என்றால், வாக்கு வங்கிக்கு வேலையே இல்லை.
முஸ்லிம்கள் மீதான எங்களது நிலைப்பாட்டுக்கு கண்டனம் தெரிவிப்பவர்கள், இந்துக்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி பேசியபோது ஏன் கண்டனம் தெரிவிக்காமல் இருந்தனர்" என்று தெரிவித்துள்ளார்.