அயோத்தியில் உத்தவ் தாக்கரே, சிவசேனாவின் 18 எம்.பி.க்கள் வழிபாடு
அயோத்தி: ராமர் பிறந்த இடமான அயோத்தியில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது கட்சியின் 18 எம்.பிக்கள் இன்று வழிபாடு நடத்தினர்.
லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது வெற்றி பெறும் எம்.பி.க்களுடன் தாம் அயோத்தியில் வழிபாடு நடத்துவேன் என அறிவித்திருந்தார் உத்தவ் தாக்கரே. இதனை நிறைவேற்றும் வகையில் இன்று காலை 18 எம்.பிக்கள் மற்றும் குடும்பத்தினருடன் மும்பையில் இருந்து புறப்பட்டார் உத்தவ் தாக்கரே.
காலை 9 மணி அளவில் அயோத்திக்கு அனைவரும் வந்து சேர்ந்தனர். பின்னர் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் அனைவரும் வழிபாடு நடத்தினர்.
சிவசேனாவின் இந்த அயோத்தி வருகையானது, ராமர் கோவில் கட்ட வேண்டும் என்கிற நெருக்கடியை மத்திய பாஜக அரசுக்கு உருவாக்கியுள்ளது. இப்பயணம் குறித்து பேசிய சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவூத், உத்தரப்பிரதேசத்திலும் மத்தியிலும் பாஜக அரசு ஆட்சியில் இருக்கிறது. அதனால் அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியே தீருவோம்.
உத்தவ் தாக்கரேவின் அயோத்தி பயணம் என்பது அவர் அலித்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறார். நாங்கள் தேர்தல்களில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என பிரசாரம் செய்தது இல்லை.
தற்போதைய லோக்சபா தேர்தல் முடிவுகள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான ஒப்புதலை மக்கள் வழங்கியிருக்கிறார்கள் என்பதுதான். இதற்கு முன்னர் அயோத்தியில் பதற்றமான சூழ்நிலை இருந்து வந்தது. தற்போது அது இல்லை. அதனால்தான் உத்தவ் தாக்கரே மற்றும் 18 எம்.பிக்கள் அங்கு பயணம் மேற்கொண்டிருக்கின்றனர் என்றார்.
இதனிடையே அகில பாரதீய அகாடா அமைப்பைச் சேர்ந்த சாமியார்களும் அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.