உலகம் முழுக்க மோடி சுற்றி பலன் என்ன?, ஒரு நாடாவது சீனாவுக்கு எதிராக பேசியதா? உத்தவ் தாக்ரே பொளேர்
இந்தியாவிற்கு எந்த ஒரு சர்வதேச நாடும் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க முன்வரவில்லை என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே குற்றம் சாட்டியுள்ளார்.
மும்பை : சீனா, பாகிஸ்தான் எல்லையில் இந்தியா போர் பதற்றத்தை சந்தித்து வரும் நிலையில் இந்தியாவிற்கு ஆதரவாக சர்வதேசநாடுகள் எதுவும் வெளிப்படையாக ஆதரவு தாராது ஏன் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவிற்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
பிரதமர் மோடி சர்வதேச தலைவர்களுடன் நட்புறவை மேற்கொண்டுள்ள போதிலும் சீனா, பாகிஸ்தானுக்கு எதிரான மோதலில் இந்தியாவுக்கு தற்போது வரை எந்த ஒரு சர்வதேச நாடும் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காதது ஏன்?
சர்வதேச நாடுகள் ஆதரவில்லை
காஷ்மீர் விவகாரதத்தில் சரியான நடவடிக்கை எடுக்காததால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதே போன்று சீனா விஷயத்திலும் நாம் கோட்டை விடப்போகிறோமா? உலக நாடுகள் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரதமர் உலகத் தலைவர்களை நண்பர்களாக்கிக் கொண்டிருக்கிறார், ஆனால் அவர்களிடம் இது வரை சீனா, பாகிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவிற்கு ஏன் ஆதரவு கோரவில்லை.
நஷ்டம் பாஜகவிற்குத் தான்
சிவசேனா தான் தங்களின் பிரதான எதிரி என்று பாஜக கருதலாம். அதனால் தானோ என்னவோ சீனா மற்றும் பாகிஸ்தான் விவகாரத்தை புறக்கணிக்கின்றனர். இந்த இருநாடுகளையும் விட சிவசேனா தான் பிரதான எதிரி என பாஜக கருதினால், அது அவர்களின் துரதிருஷ்டம்தான்.
தேசத்திற்கு அநீதி
பாஜக தேர்தல்களிலும் உள்கட்சி விவகாரத்திலும் தொடர்ந்து சிக்கி கொண்டு இருக்கிறது. இது தேசத்திற்கு செய்யும் மிகப்பெரிய அநீதி. நீங்கள் தேர்தலில் எப்போது வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். சீனாவின் பலத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது, அதற்கு ஏற்ப நாமும் நமது படைபலத்தை சமநிலையில் வைத்திருக்க வேண்டும்.
பிரதமருடனான சந்திப்பு
ஜனாதிபதி தேர்தலின் போது பிரதமர் மோடியை சந்தித்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள உத்தவ் தாக்ரே, பிரதமர் மோடி தன்னை பற்றியும் குடும்ப உறுப்பினர்கள் பற்றியும் நலம் விசாரித்ததார். மேலும் அந்த சந்திப்பின் போது மராட்டிய மொழியில் பிரதமர் மோடி உரையாடியதாகவும் உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார்.
மோதல் போக்கு
ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு விவகாரத்திலும் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளை கடந்த 2 நாட்களுக்கு முன்னர் உத்தவ் தாக்ரே கடுமையாக விமர்சித்தார். மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசிலும் மராட்டிய ஆளும் கட்சி கூட்டணியிலும் அங்கம் வகித்து வரும் சிவசேனா கட்சி அண்மைக்காலமாக பாரதீய ஜனதாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.