பாதுகாவலனே திருடன்.. ஆ.. இது ராகுல் காந்தி பேசும் வசனமாச்சே.. பலே உத்தவ் தாக்கரே!
பந்தர்பூர்: பாதுகாப்புக்காக இருக்க வேண்டிய நபர்களே திருடர்களாக மாறிவிட்டதாக பாஜகவையும், பிரதமர் மோடியையும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக பாஜக, காங்கிரஸ் கட்சிகள் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் அண்மையில் தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும், 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான அரசு அமையும் பட்சத்தில் ரபேல் ஒப்பந்தம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் அறிவித்திருந்தார்.
அதே நேரத்தில் நாட்டின் பாதுகாவலர்களாக இருக்க வேண்டியவர்களே தற்போது கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி மீது தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வருகிறார்.
தற்போது அந்த வாசகத்தை, சிவசேனா தலைவர் பால் தாக்கரே உபயோகப்படுத்த தொடங்கிவிட்டார். மகாராஷ்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு பொதுக்கூட்டத்தில் அவர் இதை பயன்படுத்தினார்.
கூட்டத்தில் திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் கதை ஒன்றை சொல்லி, நாட்டின் பாதுகாவலன் என்று தம்மை பிரகடனப்படுத்திக் கொள்ளும் பிரதமர் மோடியும் அவரது மத்திய பாஜக அரசாங்கமும் கொள்ளை அடித்துவிட்டதாக கூறினார்.
அவர் கூறிய கதை இதுதான் :
ஒருமுறை நான் பிரச்சாரம் ஒன்றுக்காக சென்றிருந்த போது, விவசாயி ஒருவர் கையில் பூச்சியால் தாக்குதலுக்குள்ளாகி இருந்த எலுமிச்சை மரத்தை தம்மிடம் காட்டினார். பூச்சிகளை அழிக்கவும், பூச்சிக்கொல்லி தயாரிக்கவும், பயன்படும் எலுமிச்சை மரம் நோய் தாக்குதலுக்கு ஆளானதாக கூறினார்.
அவரிடம் நான் நாட்டின் நிலைமையும் தற்போது அப்படிதான் உள்ளது. யார் நாட்டை பாதுகாக்க வேண்டிய இடத்தில் உள்ளார்களோ ... அவர்களே தற்போது கொள்ளையர்களாக உள்ளனர் என்று கூறினேன். தாக்கரேவின் விமர்சனத்தை கூட்டத்தினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
பாஜகவுடன் மிகுந்த நெருக்கமாக இருந்த சிவசேனா அக்கூட்டணியில் இருந்து விலகி அண்மைக்காலமாக பாஜக எதிர்ப்பு நிலையுடன் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.