உகாதி பண்டிகை: திருப்பதியில் குவிந்த பக்தர்கள்: 21 மணிநேரம் காத்திருப்பு
திருப்பதி: உகாதிப் பண்டிகையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இலவசதரிசனத்திற்காக காத்திருப்பவர் 21 மணிநேரம் கழித்தே சுவாமியை தரிசனம் செய்ய முடிவதாக பக்தர்கள் கூறியுள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதியில் வார விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
இதில் சனிக்கிழமை பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.2 கோடியே 1 லட்சம், ஞாயிற்றுக்கிழமையான நேற்று ரூ.2 கோடியே 8 லட்சம் வசூலானது. இந்நிலையில் உகாதி எனும் தெலுங்கு வருடப்பிறப்பான இன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
இலவச தரிசன பக்தர்கள் கூட்டம் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 21 அறைகளிலும் நிரம்பியுள்ளது. ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 5 கிலோமீட்டர் தூரம் காத்துகிடக்கின்றனர். இவர்கள் சாமியை தரிசனம் செய்ய 18 மணிநேரம் ஆகிறது.
நடைபாதை பக்தர்கள் தங்கியுள்ள 9 அறைகளும் நிரம்பியுள்ளது. இவர்கள் சாமி தரிசனம் செய்ய 8 மணிநேரம் ஆகிறது. இலவச தரிசனத்திற்கு 21 மணி நேரம் ஆவதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.