போலி பட்டியலில் திருச்சி டி.டி.பி. சமஸ்கிருத பல்கலைக்கழகம்! யு.ஜி.சி. லிஸ்ட் ரிலீஸ்!
டெல்லி: நாடு முழுவதும் உள்ள 22 போலிப் பல்கலைக் கழகங்களின் பெயர்களை பல்கலைக் கழக மானிய குழு (யு.ஜி.சி.) வெளியிட்டுள்ளது. இதில் திருச்சி புதூரில் உள்ள டி.டி.பி. சமஸ்கிருத பல்கலைக்கழகமும் 'இடம்' பிடித்துள்ளது.
பல்கலைக்கழக மானிய குழு சட்டம் 1956 22(1)ன் படி, மத்திய, மாநில அரசுகளால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள், சட்டப்பிரிவு 3ன் கீழ் உள்ள நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் அல்லது நாடாளுமன்றத்தால் அதிகாரம் அளிக்கப்பட்டு சட்டவிதி 22(3)ன் கீழ் யுஜசி பாடத்திட்டத்தின் கீழ் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனம் போன்றவை மட்டுமே பல்கலைக்கழகங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இந்த வகையில் உருவாக்கப்படாத கல்வி நிறுவனங்கள் எதுவும் பல்கலைக்கழகம் என்ற பெயரை பயன்படுத்த முடியாது. அதாவது பட்டம் வழங்க இயலாது என யுஜிசி சட்டப் பிரிவு 23-இல் கூறப்பட்டுள்ளது.
அவ்வாறு யுஜிசி சட்டத்துக்குப் புறம்பாக பல்கலைக்கழகம் என்ற பெயரை வைத்துக்கொண்டு நாடு முழுவதும் இயங்கி வரும் 22 போலி பல்கலைக்கழகங்களை யுஜிசி கண்டறிந்து, மாணவர்கள், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அந்தப் பட்டியலையும் வெளியிட்டிருக்கிறது.
இதில் தமிழகத்தில் திருச்சி புதூரில் இயங்கி வரும் டி.டி.பி. சமஸ்கிருத பல்கலைக்கழகம், கேரள மாநிலம் கிஷாநட்டத்தில் இயங்கி வரும் செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம், கர்நாடக மாநிலம் பெல்காம் கோகாக் பகுதியில் அமைந்துள்ள பதகன்வி சர்க்கார் உலக திறந்தநிலை பல்கலைக்கழகம், டெல்லி இந்திய அறிவியல், பொறியியல் நிறுவனம் உள்பட நாடு முழுவதும் இயங்கி வரும் 22 பல்கலைக்கழகங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த கல்வி நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படும் பட்டங்கள் செல்லாது எனவும் யுஜிசி அறிவித்திருக்கிறது.