பெரிய ஆபத்துக்கு வாய்ப்பு.. காஷ்மீர் செல்லாதீர்கள்.. பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜெர்மனி வார்னிங்!
ஸ்ரீநகர்: காஷ்மீருக்கு செல்ல வேண்டாம் என்று, பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா எச்சரிக்கைவிடுத்துள்ளது. தீவிரவாத தாக்குதல் அபாயம் இருப்பதால், தங்கள் நாட்டு குடிமக்களுக்கு இந்த எச்சரிக்கையை அவை பிறப்பித்துள்ளன.
ஜம்மு-காஷ்மீரில் பயணம் செய்யும் போது "விழிப்புடன் இருக்க" இங்கிலாந்து அரசு தனது குடிமக்களைக் கேட்டுள்ளது. இங்கிலாந்து அரசு தனது அறிவுரையில் கூறியுள்ளதாவது:
நீங்கள் ஜம்மு-காஷ்மீரில் இருந்தால், விழிப்புடன் இருக்க வேண்டும், உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றவும். பயண ஆலோசனை உள்ளிட்டவற்றை அடிக்கடி கேட்டு தெரிந்து கொள்ளவும். ஜம்மு-காஷ்மீரின் நிலைமையை டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் கண்காணித்து வருகிறது.
கிராமப்புற மாவட்டங்களிலும், முக்கிய மக்கள் தொகை மையங்கள் மற்றும் சுற்றுலாப் பகுதிகளுக்கு வெளியேயும் வெளிநாட்டினர் எளிதாக இலக்கு வைக்கப்ப்டும் வாய்ப்பு உள்ளது. குண்டுவெடிப்பு, கையெறி குண்டு தாக்குதல், துப்பாக்கிச் சூடு மற்றும் கடத்தல் உள்ளிட்ட கணிக்க முடியாத வன்முறைக்கு உள்ளாகும் ஆபத்து உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உன்னாவ் பெண் பலாத்கார விவகாரம்.. எம்எல்ஏ குல்தீப் சீன்கரின் ஆயுத உரிமைகள் ரத்து
ஜெர்மனியும், இந்தியாவில் உள்ள தனது குடிமக்களுக்கு இதேபோன்ற ஆலோசனையை வெளியிட்டுள்ளது. காஷ்மீர் செல்ல வேண்டியிருந்தால் அதை கட்டாயம் தவிர்க்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
"ஸ்ரீநகர் உட்பட காஷ்மீர் மாநில பகுதிக்கு பயணம் செய்ய வேண்டாம். பாதுகாப்பு மற்றும் உள்மாநில நிலைமை குறித்து உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள். லடாக் பிராந்தியத்தின் மேற்குப் பகுதிகளுக்குச் செல்லும்போது மிகவும் கவனமாக இருங்கள். இந்த பகுதிகளின் வழியாக தனியாகவோ அல்லது அடையாளம் தெரியாத வழிகாட்டியுடனோ பயணிக்க வேண்டாம். காரை நிறுத்தி, கிடைத்த இடங்களில் முகாமிட்டுக் கொள்ளாதீர்கள்" இவ்வாறு ஜெர்மனி தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி அதன் குடிமக்களுக்கு பயண எச்சரிக்கையை வழங்கிய சில நிமிடங்களுக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவும் ஜம்மு-காஷ்மீருக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியது.
"மிக அதிக ஆபத்து காரணமாக காஷ்மீரில் மேற்கொள்ளும் அனைத்து பயணங்களுக்கு எதிராகவும் நாங்கள் எச்சரிக்கைவிடுக்கிறோம். நீங்கள் பயணம் செய்தால், தொழில்முறை பாதுகாப்பு ஆலோசனையைப் பெற வேண்டும். வழக்கமான பயணக் காப்பீட்டு திட்டங்கள் அங்கு செல்லாது என்பதையும், ஆஸ்திரேலிய அரசு தூதரகம் உங்களுக்கு உதவி வழங்க வாய்ப்பில்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்". இவ்வாறு ஆஸ்திரேலியா தனது குடிமக்களுக்கு அறிவறுத்தியுள்ளது.