1984 -ல் பஞ்சாப் பொற்கோவில் மீது ராணுவ நடவடிக்கை.. இங்கிலாந்து உதவியதாக திடுக் தகவல்
டெல்லி: பஞ்சாபில் உள்ள சீக்கியர் பொற்கோவில் மீது இந்திரா காந்தி ஆட்சியில் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இங்கிலாந்து அரசின் உதவியை இந்தியா கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது
1980களில் பஞ்சாப்பை பிரித்து காலிஸ்தான் தனி நாடு அமைக்க வேண்டும் என்பதற்காக சீக்கியர்கள் ஆயுதமேந்தி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு புகலிடமாக இருந்தது பஞ்சாப் பொற்கோவில்.
இங்குதான் காலிஸ்தான் விடுதலை இயக்கத் தலைவர் பிந்தரன்வாலே உள்ளிட்ட ஆயிரக்கணக்கான போராளிகள் அடைக்கலமாகி இருந்தனர். காலிஸ்தான் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க பஞ்சாப் பொற்கோவில் மீது ஆபரேஷன் புளூ ஸ்டார் என்ற பெயரில் 1984ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.
இந்த நடவடிக்கையில் பிந்தரன்வாலே உள்ளிட்ட நூற்றுக்கணக்கான காலிஸ்தான் போராளிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பழிவாங்கவே இந்திரா காந்தியை சீக்கிய மெய்ப்பாதுகாவலர்களே படுகொலை செய்தனர்.
இந்நிலையில் இந்த ராணுவத் தாக்குதலை நடத்த அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி, இங்கிலாந்து அரசின் உதவியை கோரியதாக லண்டனில் உள்ள ஒரு இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
சீக்கியர்களின் பொற்கோயிலை தாக்குவதற்கு அப்போதைய இங்கிலாந்து பிரதமர் மார்க்ரெட் தாட்சர் சிறப்பு விமானப்படையை கொடுத்து உதவி புரிந்தார் என்றும் அந்த இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விவாகரத்தை உடனடியாக விசாரிக்க தற்போதைய இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் உத்தரவிட்டுள்ளார். இந்திய அரசும் விசாரணை நடத்த வேண்டும் என சீக்கியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உள்நாட்டு பிரச்னைக்கு இங்கிலாந்து நாட்டின் உதவியை நாடி இருக்கும் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து உதவியா? லெப். ஜெனரல் பிரார் மறுப்பு
ஆனால் பொற்கோவில் நடவடிக்கைக்கு இங்கிலாந்தின் உதவி கோரப்படுவதை பொற்கோவில் ராணுவ நடவடிக்கைக்கு பொறுப்பாக இருந்த லெப். ஜெனரல் பிரார் மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், பொற்கோவிலில் இருந்து சீக்கிய தீவிரவாதிகளை வெளியேற்ற எந்த ஒரு நாட்டின் உதவியுமே கோரப்படவில்லை. இது தொடர்பான ஆவணங்கள் அனைத்துமே நம்பகத்தன்மை கொண்டவை அல்ல.
பொற்கோவில் ராணுவ நடவடிக்கை என்பது முழுவதுமாகவே இந்திய ராணுவ தளபதிகளாலேயே திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டது என்றார்.
பொற்கோவில் நடவடிக்கைக்கு பொறுப்பானவர் என்ற காரணத்தினாலேயே இங்கிலாந்தில் இதே ராணுவ தளபதி பிரார் மீது சீக்கியர்கள் அடிக்கடி தாக்குதலை நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.