அஸ்ஸாமில் 6 ஓ.என்.ஜி.சி. ஊழியர்களை துப்பாக்கி முனையில் கடத்திய உல்பா தீவிரவாதிகள்
குவஹாத்தி: அஸ்ஸாமில் ஓ.என்.ஜி.சி. எண்ணெய் நிறுவனத்தின் ஊழியர்கள் 6 பேரை துப்பாக்கி முனையில் உல்பா தீவிரவாதிகள் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்ஸாம் தனிநாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்தி வருகிறது உல்பா (ஐ) இயக்கம். சீனாவின் ஆதரவுடன் செயல்படுகிற தீவிரவாத இயக்கங்களில் உல்பாவும் ஒன்று.
அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ஓ.என்.ஜி.சி. எண்ணெய் நிறுவன பணியாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்களை கடத்தி பணம் பேரம் பேசுவதையும் உல்பா தீவிரவாதிகள் வாடிக்கையாக வைத்துள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன்னர் அஸ்ஸாமில் ரூ1 கோடி கேட்டு பாஜக பிரமுகர் மகனை கடத்தி சென்றனர் இந்த தீவிரவாதிகள்.
கடந்த டிசம்பர் மாதம் அருணாச்சல பிரதேசத்தின் சங்லாங் மாவட்டத்தில் தனியார் எண்ணெய் நிறுவன ஊழியர்கள் 2 பேரை உல்பா தீவிரவாத கும்பல் கடத்திச் சென்றது. பல மாதங்கள் பிணைக் கைதிகளாக வைத்திருந்த நிலையில் கடந்த 3-ந் தேதிதான் இருவரையும் விடுவித்தனர்.
இந்த நிலையில் அஸ்ஸாமின் சாராய்டியோ மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவன ஊழியர்கள் 6 பேரை அதிகாலை 1.30 மணிக்கு துப்பாக்கி முனையில் உல்பா தீவிரவாத கும்பல் கடத்திச் சென்றுள்ளது. ஓ.என்.ஜி.சி. ஊழியர்கள் 6 பேரை கடத்திச் சென்ற தீவிரவாதிகள் இதுவரை எந்த நிபந்தனையையும் தெரிவிக்கவில்லை.
இதனிடையே 6 ஊழியர்கள் எங்கே பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர் என்பதை கண்டறிவதில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகின்றனர்.