மணிப்பூரில் 20 ராணுவத்தினர் படுகொலை- 4 தீவிரவாத இயக்கங்களின் கூட்டமைப்பு பொறுப்பேற்பு!
இம்பால்: மணிப்பூரில் 20 ராணுவத்தினரை படுகொலை செய்த தாக்குதல் சம்பவத்துக்கு 4 தீவிரவாத இயக்கங்களின் கூட்டமைப்பு பொறுப்பேற்றுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக இத்தகைய பயங்கர தாக்குதல் வடகிழக்கு மாநிலத்தில் நடத்தப்பட்டிருப்பது உளவுத்துறையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் தனிநாடு கோரி இயங்கி பல அமைப்புகள் ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றன. இவற்றில் பெரும்பாலான அமைப்புகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி அமைதி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. இத்தகைய பேச்சுவார்த்தைகளை ஏற்காத அமைப்புகள் தொடர்ந்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இப்படி ஆயுதம் தாங்கிய குழுக்கள் அண்மையில் ஒருங்கிணைந்து ஒரு கூட்டமைப்பாக உருவாகின. இந்த அமைப்பில் நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் (கப்லாங்), உல்ஃபா(ஐ) கம்தாபூர் விடுதலை முன்னணி, போடோலாந்து விடுதலை முன்னணி( சோன்ஜ்பிஜித்) ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டமைப்பான 'மேற்கு-தென்கிழக்கு ஆசியா ஐக்கிய விடுதலை முன்னணி" என்ற பெயரில் இணைந்து செயல்பட தீர்மானித்தது.
இக்கூட்டமைப்பின் முதலாவது தாக்குதல்தான் மணிப்பூரில் நேற்று ராணுவத்தினர் மீது நடத்தப்பட்டது. ராணுவத்தினர் மீதான தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாகவும் கூட்டமைப்பு அறிவித்தும் உள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் செயல்படும் பல ஆயுதம் தாங்கிய குழுக்களுக்கு இந்தியா- மியான்மர் எல்லைதான் அடக்கம். ஆள் நடமாட்டமே இல்லாத மலை வனப்பகுதிகள்தான் இவர்களுக்கு புகலிடமாக இருக்கிறது.
அதே நேரத்தில் மியான்மரில் காலூன்றி இருக்கும் லஷ்கர் இ தொய்பாவினரும் இந்த கூட்டமைப்பினருடன் கை கோர்த்திருக்கலாம் என உளவுத்துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும் மியான்மரின் காசின் விடுதலை ராணுவத்தினரே உல்ஃபா அமைப்பினருக்கு ஆயுத பயிற்சி கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.
மியான்மரை தளமாகக் கொண்டு இப்புதிய கூட்டமைப்பு மத்திய அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தியிருப்பது ராணுவம் மற்றும் உளவுத்துறைக்கு புதிய பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது.,