கர்நாடகா எழுதி கொடுத்ததை அப்படியே வாசித்தாரா உமா பாரதி? தமிழகத்தின் வயிற்றில் அடித்த மத்திய அமைச்சர்
டெல்லி: எதிர்பார்த்தபடியே, காவிரி தொடர்பான பேச்சுவார்த்தை கூட்டத்தில், கர்நாடகாவுக்கு ஆதரவாக முடிவை அறிவித்துள்ளார் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி.
கர்நாடகாவுக்கு நெருக்கமான உமா பாரதியை கடந்த சில நாட்களாக கர்நாடக அரசியல்வாதிகள் கட்சி வேறுபாடின்றி பார்த்து பேசிவிட்டு வந்ததன் பலன் இது. முதலில் மத்திய அமைச்சர் சதானந்தகவுடா, பிறகு சித்தராமையா என உமா பாரதி இல்லத்தில் முகாமிட்டிருந்தனர் கர்நாடக தலைவர்கள். இன்றைய பேச்சுவார்த்தையின்போது அதற்கு கைமேல் பலன் கிடைத்துவிட்டது.
இரு மாநில நீர் இருப்பை அறிய நிபுணர் குழுவை அமைக்கப்போவதாக கூறியுள்ளார், உமா பாரதி. இதைத்தான், இத்தனை நாட்களாக கர்நாடகாவின் அனைத்து கட்சிகளுமே ராகம் மாறாமல் சொல்லி வந்தன. அவர்களை வழி மொழிந்துள்ளார் உமா பாரதி.
குடிநீருக்கே முக்கியத்துவம்
இப்படி ஒரு குழுவை அமைத்தால் என்னவாகும்..? அந்த குழு இரு மாநில அணைகளையும் ஆய்வு செய்துவிட்டு, கர்நாடகாவின் குடிநீர் தேவைதான், தமிழகத்தின் விவசாய தேவையை விட முக்கியம் என பரிந்துரைக்கும். பிறகு என்ன..? உரிமையாக அணைகளை மூடிக்கொள்ளலாம் கர்நாடக அரசு. காலத்தை இழுத்தடித்து, அந்த நிபுணர் குழு ஆராயும்வரை, கர்நாடகா கண்டிப்பாக தண்ணீர் விடாது என்பதால், தமிழக விவசாயிகள் தத்தளிப்பார்கள்.
எச்சரித்த கருணாநிதி, வைகோ
இந்த சதிகளை முன்கூட்டியே உணர்ந்ததால்தான், உமா பாரதி தலைமையில் பேச்சுவார்த்தை வேண்டாம் என்றார் திமுக தலைவர் கருணாநிதி. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஒருபடி மேலே போய், பேச்சுவார்த்தை பெருங்கேடாக முடிந்துவிடும் என வார்னிங் கொடுத்தார். முதல்வர் ஜெயலலிதாவும் இதை எதிர்பார்க்காமல் இருக்கும் நபர் அல்ல. எனவேதான் வலுவான வாதத்தை அமைச்சர் பழனிச்சாமி மூலம் முன்வைத்தார்.
வாசித்தாரா உமா பாரதி
ஆனால், தமிழக வாதத்தை கருத்திலேயே கொள்ளாமல், முன்கூட்டியே எழுதி கொடுத்த ஒரு வாக்கியத்தை வாசிப்பதை போல, நிபுணர் குழுவை அமைக்கப்போகிறேன் என்று சொல்லிவிட்டார் உமா பாரதி. சாயம் வெளுத்துவிட்டது. கர்நாடகாவில் குடிக்கவே தண்ணீர் இல்லை என்ற வாதமே முதலில் தவறானது. ஏனெனில் சுமார் 10 டிஎம்சிக்கும் மேற்பட்ட குடிநீரை காவிரியிலிருந்து பெங்களூருக்கு எடுத்து வருகிறது கர்நாடகா. இதையும் கணக்கில் காட்டிதான் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்தால் குடிநீர் கிடைக்காது என கூறிவருகிறது.
வேறு திட்டங்கள் உள்ளன
பெங்களூர் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டாமா, அங்கும் தமிழர்கள் வசிக்கிறார்களே.. என்று நீங்கள் கேட்கக்கூடும். ஆனால் அதற்கு காவிரி பலி கிடையாது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பில் கூட பெங்களூரை காவிரி பாசன பகுதி என குறிப்பிடவில்லை. கர்நாடகாவாகவே பெங்களூருக்கு காவிரியிலிருந்து நீரை எடுத்து வருகிறது. பெங்களூருக்கு எத்தினஹொலே போன்ற பிற குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். உள்ளூர் அரசியலால் அந்த திட்டங்களை கர்நாடக அரசுகள் கிடப்பில் போட்டு வருகின்றன.
இனிமேலும் உமா பாரதியை நம்பாமல், உச்சநீதிமன்றத்தை மட்டுமே நம்பி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முற்படுவதே தமிழக அரசுக்கும், விவசாயிகளுக்கும் நல்லது.