தமிழர்களுக்கு எதிரான கலவரம்.. துப்பாக்கிச் சூட்டில் பலியான உமேஷ் கெளடா.. நான் ஈ சுதீப் ரசிகர்!
பெங்களூரு: பெங்களூரில் திங்கள்கிழமை நடந்த பெரும் கலவரத்தில் தமிழர்களின் வாகனங்களைத் தாக்கி தீவைத்து, போலீஸ் வாகனத்தையும் தீவைத்து எரி்க்க முயன்றபோது நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியான உமேஷ் கெளடா, நான் சுதீஷ் படத்தின் நாயகன் சுதீப்பின் ரசிகர் என்பது தெரிய வந்துள்ளது. அவரது கையில் குத்தப்பட்டிருந்த சுதீப் உருவத்தை வைத்துத்தான் உமேஷை போலீஸார் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த உமேஷுக்கு 25 வயதுதான் ஆகிறது. அவர் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு அவரை அடையாளம் காண்பதில் போலீஸாருக்குக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அவரது இடது கையில் சுதீஷின் உருவத்தை அவர் பச்சை குத்தியிருந்தார்.
அவர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவராக இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில் போலீஸார் விசாரித்து வந்தனர். அப்பகுதியில் உள்ள ரசிகர் மன்றத்தையும் தொடர்பு கொண்டு கேட்டபோதுதான் இறந்தவர் உமேஷ் கெளடா என்பது தெரிய வந்தது. இதையடுத்து உள்ளூரைச் சேர்ந்த சிலர் கொடுத்த தகவலின் பேரில் உமேஷின் சகோதரர் தினேஷ் என்கிற ஹனுமந்துவை போலீஸார் கண்டுபிடித்து அவரைக் கூட்டி வந்தனர். அவர் வந்து பார்த்து உமேஷை அடையாளம் காட்டினார்.
சுதீப் ரசிகர்
உமேஷ் கெளடாவின் உறவினரான ராமு என்பவர் கூறுகையில், உமேஷ் தீவிர சுதீப் ரசிகர். அவரது பெயரையும் உருவத்தையும் பச்சை குத்தியிருப்பார். இதை வைத்துத்தான் போலீஸார் இப்போது அடையாளம் கண்டுள்ளனர் என்றார்.
கையில் ஒரு குழந்தை.. வயிற்றில் 2வது குழந்தை
உமேஷுக்குத் திருமணமாகி விட்டது. அவரது மனைவி பெயர் கலாவதி. இத்தம்பதிக்கு ஒன்றரை வயதில் மகள் உள்ளார். தற்போது கலாவதி மீண்டும் கர்ப்பமாகவும் இருக்கிறார். தனது கணவரின் மரணத்தால் கலாவதி உடைந்து போயுள்ள்ளார். அவரது குடும்பத்தினும் நிர்க்கதியாகியுள்ளனர். பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை பார்த்து வந்தார் உமேஷ். தமிழர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தபோது இவரும் அதில் இணைந்துள்ளார். கடைசியில் உயிரை விட்டுள்ளார்.
என் மகன் அப்பாவி.. வேதனையில் தந்தை
அதேசமயம், தனது மகன் எந்த வகையிலும் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்று உமேஷின் தந்தை கூறுகிறார். அவர் கூறுகையில், எனது மகன் எந்த வகையிலும் போராட்டத்தில் ஈடுபடவில்லை. போராட்டம் நடந்த இடத்தில் இருந்தான். பின்னர் நிலைமை மோசமாகவே வீட்டுக்குத் திரும்ப முடிவு செய்து வந்து கொண்டிருந்தான். அப்போதுதான் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதில் எனது மகன் இறந்து விட்டான் என்று கூறியுள்ளார் உமேஷின் தந்தை.
நிதியுதவி குவிகிறது
உமேஷின் தந்தைக்கு சிறுநீரக பிரச்சினை உள்ளது. தாயாரும் நடக்க முடியாதவர். இவர்களை உமேஷ்தான் பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு ரூ. 10 லட்சம் கடன் வேறு இருக்கிறது. எல்லாவற்றையும் எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை என்று கண்ணீருடன் கூறுகிறார் உமேஷின் தந்தை. தற்போது கர்நாடக அரசும், கன்னட அமைப்புகளும் உமேஷ் குடும்பத்துக்கு உதவிகளை அறிவித்துள்ளன. இதுவரை ரூ. 32 லட்சம் அளவுக்கு உதவிகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.