தாவூத் பாகிஸ்தானில் தான் உள்ளார்.. முகவரியை உறுதி செய்தது ஐ.நா.,!
டெல்லி: மும்பை தொடர் குண்டு வெடிப்பில் முக்கியக் குற்றவாளியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானில் வசித்து வருவதாக இந்தியா அளித்த தகவல்களை ஐ.நா. அமைப்பு உறுதி செய்துள்ளது.
மும்பையில் 1993ல் மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு உள்பட பல வழக்குகளில் தேடப்பட்டு வரும் முக்கியக் குற்றவாளி தாவூத் இப்ராகிம். கடந்த 20 வருடத்திற்கும் மேலாக இவர் பாகிஸ்தானில் அந்த நாட்டு அரசின் ஆதரவுடனும், ஐஎஸ்ஐ உளவு அமைப்பு மற்றும் ராணுவத்தின் பாதுகாப்புடனும் வசித்து வருவதாக இந்தியா கூறி வருகிறது. ஆனால் இந்தியாவின் குற்றச்சாட்டை பாகிஸ்தான் அரசு மறுத்து வருகிறது.
மேலும், இஸ்லாமாபாத், கராச்சி என பல இடங்களில் மாறி மாறி வசித்து வரும் தாவூத் இப்ராகிம் தற்போது கராச்சியில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் வசித்து வருவதற்கு ஆதாரமாக, அவருடைய 9 முகவரிகளை ஐ.நா. அமைப்பிடம் இந்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அளித்திருந்தது.
பாகிஸ்தானில் பதுங்கியிருக்கும் தாவூத் இப்ராகிம் அவ்வப்போது தனது இருப்பிடத்தை மாற்றிக் கொள்வதாகவும் இந்திய அரசு குற்றம் சாட்டியிருந்தது. இதையடுத்து, அந்த முகவரிகளை ஆய்வு செய்த ஐ.நா. அமைப்பு, இந்திய அரசு அளித்திருந்த 9 முகவரிகளில், 6 முகவரிகளில் அவர் வசித்து வந்ததை உறுதி செய்துள்ளது. மற்ற 3 முகவரிகள் தவறானவை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
குறிப்பாக, கராச்சியில் உள்ள மார்கல்லா சாலை முகவரியில் தாவூத் இப்ராகிம் வசிக்க வில்லை என்றும், அது ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதர் மலீஹா லோதியின் முகவரி என்றும் அந்த அமைப்பு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. எனவே இதன் மூலம் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தங்கியிருப்பது உறுதியாகியுள்ளது.