திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் விபரீத ஆபரேஷன் செய்த சாப்ட்வேர் என்ஜினியர்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் திருமணம் செய்ய பெண் கிடைக்காத விரக்தியில் சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவர் தனது உயரத்தை அதிகரிக்க குடும்பத்தாருக்கு தெரியாமல் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இது குறித்து தெரிந்த பெற்றோர் மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்டனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் நிகில் ரெட்டி(24). ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் சாப்ட்வேர் என்ஜினியர். 5 அடி 7 அங்குலம் உயரமான அவருக்கு தான் குள்ளமாக இருப்பதாக கவலை. அவருக்கு திருமணம் செய்ய பெண் கிடைக்கவில்லை.
தான் குள்ளமாக இருப்பதால் தான் பெண் கிடைக்கவில்லை என்று நினைத்த அவர் தனது உயரத்தை அதிகரிக்க அறுவை சிகிச்சை செய்ய குளோபல் மருத்துவமனையில் சேர்ந்தார். இந்நிலையில் மகனை 3 நாட்களாக காணாத பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் அவரது செல்போன் சிக்னலை வைத்து அவர் மருத்துவமனையில் இருப்பதை கண்டுபிடித்தனர். அறுவை சிகிச்சை செய்து படுக்கையில் இருந்த நிகிலை பார்த்த அவரது பெற்றோர் ரகளையில் ஈடுபட்டனர்.
தங்களுக்கு தெரிவிக்காமல் மருத்துவமனை எப்படி அவருக்கு அறுவை சிகிச்சை செய்யலாம் என்று கேட்டனர். நிகில் ஒரு மேஜர், தனது பெற்றோர் ஊரில் இல்லை என்று கூறினார், மேலும் கடந்த 6 மாதங்களாக அவர் தனியாக தான் மருத்துவமனைக்கு வந்தார் என்று மூத்த டாக்டர் ஒருவர் தெரிவித்துள்ளார்.