போலீஸ் கண்காணிப்பது தெரியாமல் சிறையில் கன்னா, ராயை திட்டிய இந்திராணி
மும்பை: போலீசார் கண்காணிக்கிறார்கள் என்பது தெரியாமல் இந்திராணி ஷீனா கொலைக்கு சஞ்சீவ் கன்னாவும், டிரைவர் ராயும் தான் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இந்திராணி, அவரது இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா, முன்னாள் கார் டிரைவர் ராய் ஆகியோரை போலீசார் ஒரே அறையில் சந்திக்க செய்தனர். அவர்களை மட்டும் அந்த அறையில் விட்டுவிட்டு போலீசார் வெளியே சென்று அவர்களுக்கு தெரியாமல் கண்காணித்தனர்.
போலீசார் கண்காணிப்பது தெரியாமல் அவர்கள் பேசிய விவரம் வருமாறு,
இந்திராணி: கன்னா, ஏன் இப்படி செய்தீர்கள். உங்களால் தான் நான் இங்கு உள்ளேன். இந்த விவகாரத்தில் என்னை இழுத்துவிட்டீர்கள். நான் உங்களை நம்பினேன்.
கன்னா பதில் கூறாமல் அமைதியாக இருந்தவுடன் இந்திராணி அழுதார்.
இந்திராணி:
இன்னும் எதை எல்லாம் என்னிடம் இருந்து மறைத்துள்ளீர்கள்? நீங்கள் போலீசாரிடம் தெரிவித்ததில் பாதி விஷயங்கள் எனக்கு அதிர்ச்சி அளித்துள்ளன. அது எனக்கு தெரியாது. ஏன் மறைத்தீர்கள்?
இந்திராணி தனது குரலை உயர்த்தியதும் அவரை அமைதியாக இருக்குமாறு கன்னா தெரிவித்தார்.
கன்னா:
மன்னித்துவிடு. நான் என்ன செய்ய முடியும். நான் சொல்வதை கேள்.
இந்திராணி(டிரைவரை பார்த்து):
இது எல்லாம் உன் தவறு தான். உன்னை யார் போலீஸ் முன்பு உளறச் சொன்னது? உனக்கு என்ன பணம் தேவையா? நான் கொடுத்திருப்பேனே. உனக்கு பிரச்சனை ஏற்பட்டால் நான் சட்ட உதவி செய்திருப்பேனே. நீ மட்டும் வாயை மூடிக்கொண்டு இருந்திருந்தால் இது நடந்திருக்காது. நீ யார் பக்கம்? உன்னால் தான் எனக்கு இந்த நிலை.
இந்திராணி:
அந்த இடத்தை உனக்கு அடையாளம் காண்பித்த நபர் பற்றி ஏன் என்னிடம் கூறவில்லை. நீ ஏன் அவர் உதவியை நாடினாய்?
கன்னாவை பார்த்து இந்திராணி கூறுகையில்: நீங்கள் இருவரும் கூட்டா. இதில் எதையும் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். நீங்கள் தான் என்னை மாட்டிவிட்டீர்கள். இது என் திட்டம் என்று நீங்கள் எப்படி போலீசாரிடம் கூறலாம்? எவ்வளவு துணிச்சல் இருந்தால் என் மீது பழிபோடுவீர்கள்? இதற்கு எல்லாம் நீங்கள் இருவரும் தான் காரணம் என்றார்.