தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி அமலில் உள்ளது.. மார்கண்டேய கட்ஜு பரபரப்பு குற்றச்சாட்டு
டெல்லி: தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலை இருப்பதாக சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக தனக்கு வரும் பேஸ்புக் புகார்களை அவர் மேற்கோள் காட்டி பேஸ்புக்கில் இவ்வாறு அவர் கருத்து தெரிவித்துள்ளார். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, போராட்டம் நடத்த தாங்கள் தயாராக இருப்பதாகவும், 4 பேருக்கு மேல் தமிழகத்தில் எங்கு கூடினாலும், போலீசார் அவர்களை விரட்டிவிடுவதாகவும் புகார்கள் வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து கட்ஜு கூறுகையில், 1975ம் ஆண்டு, ஆர்டிகிள் 352ன்கீழ், இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அதன்படி, அடிப்படை உரிமைகளான பேச்சு உரிமை, கருத்து உரிமை பறிக்கப்பட்டது. ஆயுதங்கள் ஏதுமின்றி, போராட்டம் நடத்தும் உரிமையும் பறிக்கப்பட்டது.
தற்போது தமிழகத்திலும் எமர்ஜென்சி உள்ளது. ஆனால், அறிவிக்கப்படவில்லை அவ்வளவுதான். ஆயுதங்கள் இன்றி போராட்டம் நடத்த வழங்கப்பட்டுள்ள உரிமை தமிழகத்தில் பறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் குற்றம்சாட்டியுள்ளார்.