தமிழக எதிர்ப்பு எதிரொலி: இந்தியை முதன்மை மொழியாக கற்பிக்கும் யுஜிசி அறிவிப்பு வாபஸ்
டெல்லி: இந்தியை முதன்மை மொழியாக கற்பிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) வெளியிட்ட அறிவிப்பை வாபஸ் பெற்றுள்ளது.
பல்கலைக்கழகங்களில் ஆங்கிலத்துடன் இந்தியை முதன்மை மொழியாக்க கற்பிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது.
தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி.) அனுப்பிய சுற்றறிக்கையில், இளங்கலை பட்டப்படிப்புகளில் ஆங்கிலத்துடன் இந்தி மொழியையும் முதன்மை பாடமாக அறிமுகப்படுத்தும் படியும், சட்டம் மற்றும் வணிகவியல் படிப்புகளில் இந்தி கட்டாயமாக கற்பிக்கப்பட வேண்டும் என்றும் யு.ஜி.சி. கூறியிருந்தது. இதற்கு, தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
தமிழக தலைவர்கள் எதிர்ப்பு
இந்தியை முதன்மை பாடமாக்கும் இந்த உத்தரவுக்கு அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க. மற்றும் பா.ம.க. ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
முதல்வர் எதிர்ப்பு
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு, பல்கலைக்கழக மானியக்குழுவின் இந்தச் சுற்றறிக்கை அறவே பொருந்தாது என்று கூறிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்தியை திணிக்கும் முயற்சியை அ.தி.மு.க. முறியடிக்கும் என்றும் கூறியிருந்தார்.
யுஜிசி வாபஸ்
இதையடுத்து பல்கலைக்கழகங்களில் ஆங்கிலத்துடன் இந்தியை முதன்மை மொழியாக்க கற்பிக்க வேண்டும் என்ற அறிவிப்பை யுஜிசி வாபஸ் பெற்றுள்ளது.
கட்டாயமில்லை
இந்தியை முதன்மை பாடமாக கற்பிப்பது கட்டாயமில்லை என்றும், எதை கற்பிக்க வேண்டும் என்பது பல்கலைக்கழகங்களின் தனிப்பட்ட அதிகாரம் என்றும் யுஜிசி தலைவர் வேதபிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார். திருத்தப்பட்ட யுஜிசி சுற்றறிக்கை நாளை வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.