ம.பி பத்திரிக்கையாளர் அக்ஷய் சிங் இறப்பு குறித்து விசாரணை தேவை - யுனெஸ்கோ வலியுறுத்தல்
நியூயார்க்: மத்திய பிரதேச பத்திரிகையாளர் மரணம் குறித்து விசாரணை நடத்த ஐ.நாவின் யுனெஸ்கோ அமைப்பு இந்தியாவை வலியுறுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் வியாபம் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த முறைகேடு தொடர்பாக செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் அக்ஷய் சிங் மர்மமாக இறந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ வலியுறுத்தியுள்ளது.
பத்திரிகையாளர்கள் பாதுகாப்பான சூழ்நிலைகளில் பணி செய்ய வேண்டும் என்றும், அவர்கள் மீதான தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் தண்டனையில் இருந்து தப்பக்கூடாது என்றும் யுனெஸ்கோ கூறியுள்ளது.
பத்திரிகையாளர் அக்ஷய் சிங்கின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள யுனெஸ்கோ டைரக்டர் ஜெனரல் ஐரினா போகோவா, இந்த மரணம் பற்றி அதிகாரிகள் உடனடியாக விசாரணையைத் தொடங்க வேண்டும் என்றும் கூறினார். அக்ஷய் சிங் மரணம் குறித்து சி.பி.ஐ தனது முதற்கட்ட விசாரணை அறிக்கையை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.