நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் மர்ம சூட்கேஸ்... வெடிகுண்டு இருக்குமோ என பீதி!
திருவள்ளூர்: அகமதாபாத் செல்லும் ரயிலில் கேட்பாரற்று கிடந்த மர்ம சூட்கேசால் ரயில் கும்மிடிப்பூண்டி அருகே நிறுத்தப்பட்டது. மர்ம சூட்கேசில் வெடிகுண்டு உள்ளதா என ஆராய சென்னையில் இருந்து நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
கடந்த 1ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த கவுகாத்தி ரயிலில் இரட்டை குண்டுகள் வெடித்ததில் இளம்பெண் ஒருவர் பலியானார். 14 பயணிகள் காயம் அடைந்தனர்.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நடந்த இந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, மாநிலத்தின் அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. குண்டு வைத்த சதிகாரர்களைப் பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை சுமார் 9.35 மணியளாவில் கோவையில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் செல்லும் ‘நவஜீவன்' எக்ஸ்பிரஸ் ரயில் சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது.
அப்போது எஸ்-1 பெட்டியில் ஜன்னலோர 63, 64-ம் எண் இருக்கைகளுக்கு அடியில் ஒரு சிமெண்டு கலர் சூட்கேஸ் கேட்பாரற்று கிடப்பதை மற்ற பயணிகள் கவனித்துள்ளனர். சம்பந்தப்பட்ட இருக்கையிலும் பயணிகள் யாரும் இல்லாததால், மர்ம சூட்கேஸ் மீது பயணிகளின் சந்தேகம் வலுத்தது.
மர்ம சூட்கேசில் வெடிகுண்டு இருக்கலாம் என சந்தேகித்த பயணிகள், உடனடியாக இது தொடர்பாக ரயில்வே போலீசுக்கு தகவல் அளித்தனர். துரிதகதியில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், குண்டூரில் நிற்க வேண்டிய ரயிலை முன்கூட்டியே கும்மிடிப்பூண்டியில் நிறுத்தினர்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சிப்காட் சப்-இன்ஸ்பெக்டர் முனிவேல் மற்றும் ரயில்வே போலீசார் எஸ்-1 பெட்டியில் ஏறி அங்கிருந்த சூட்கேசை பத்திரமாக கைப்பற்றி 3-வது பிளாட்பாரத்தில் இறக்கி வைத்தனர். சுமார் சூட்கேஸ் 12 கிலோ எடை கொண்ட அந்த சூட்கேசுக்குள் வெடிகுண்டு இருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார் இது தொடர்பாக வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்த வெடிகுண்டு நிபுணர்கள் சென்னையிலிருந்து கும்மிடிப்பூண்டிக்கு விரைந்துள்ளனர். அவர்கள் சோதனை நடத்திய பின்னர் தான் சூட்கேசில் இருப்பது என்ன என்பது பற்றிய முழுவிபரங்கள் தெரிய வரும்.