பட்ஜெட் 2018: அருண் ஜெட்லி கிண்டும் அல்வா... சில ருசிகர சம்பவங்கள்
பட்ஜெட் பணிகள் படு சீக்ரெட் ஆக நடைபெறும். பிக்பாஸ் வீடு போல ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. யாருடனும் பேசவும் முடியாது. பட்ஜெட் பணியில் அல்வா கிண்டுவது படு சுவாரஸ்யம்.
Recommended Video
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ளது. பிப்ரவரி 1ஆம் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் பிரிண்டிங் செய்யும் பணியை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது கையால் அல்வாவைக் கிண்டி தொடங்கி வைப்பார்.
நல்ல காரியம் செய்றதுக்கு முன்னாடி ஸ்வீட் சாப்பிடனும்னு எங்க அம்மா சொல்லியிருக்காங்க... இது ஏதோ விளம்பர வாசகம் மட்டுமல்ல. பட்ஜெட் உரை பிரிண்ட் எடுக்கும் முன்பாக நிதியமைச்சக பணியாளர்கள் அல்வா சாப்பிட்டு விட்டுதான் பணிகளை தொடங்குகின்றனர்.
காரணம் தித்திப்புடன் பட்ஜெட் பணிகளில் ஈடுபட்டு அந்த ஆண்டை தித்திப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இனிப்புடன் இந்த பணி தொடங்கப்படுகிறதாம்.
மத்திய பட்ஜெட் உரை
மத்திய பட்ஜெட்டை அச்சடிப்பதற் காக ஒவ்வொரு வருடமும் சுமார் 200 பணியாளர்கள் விரும்பி சிறை வைக்கப்படுகிறார்கள். நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் மூன்றுகட்ட பாதுகாப்பு சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக அவை வெளியில் கசிந்து விடாமல் இருக்க இந்த உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய் யப்படுகின்றன.
பட்ஜெட் சிறை
நாடாளுமன்ற வளாகத்தை ஒட்டி மத்திய நிதி அமைச்சகம் அமைந்துள்ள நார்த் பிளாக் கட்டிடத்தின் கீழ்தளத் தில் பட்ஜெட் அச்சடிக்கப்படுகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படு வதற்கு சுமார் 15 நாள்களுக்கு முன்னதாக அச்சுப் பணி தொடங்கப்படுகிறது. நிதி அமைச்சக அலுவலர்கள் உட்பட அச்சடிப்புப் பணியில் ஈடுபடும் சுமார் 200 பேர் மற்றும் பணியாளர்கள் பட் ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை சுமார் 15 நாள்களுக்கு சிறை வைக் கப்படுகிறார்கள்.
ஓட ஒளிய முடியாது
பிக்பாஸ் வீடு போல ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. யாருடனும் பேசவும் முடியாது. அங்கே கேமரா மூலம் உள்ள நடப்பதை வெளியே இருப்பவர்கள் பார்க்கலாம். இங்கே எல்லாமே சீக்ரெட். காலையில் எழுவது முதல் உறங்குவது வரை மூடிய கதவுகளுக்கு உள்ளேயே வாழ வேண்டும். டீ முதல் உணவு வரை தேவையான பொருட்கள் மட்டும் வெளியில் இருந்து கொண்டு வரப்படும். அவை தீவிர சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படும். இந்த கதவுகளுக்குள் பாதுகாப்பு போலீசாருக்கும் அனுமதி இல்லை.
கண்காணிப்பு தீவிரம்
நிதித்துறை அலுவலர்கள் விரும்பி ஏற்கும் இந்தச் சிறையில் வசிப்பவர்களுக்கு ஏதேனும் அவசர காரியம் என்றால் மட்டும் குடும்பத்தாருடன் தொலைபேசி யில் ஸ்பீக்கரில் மட்டுமே பேச முடியும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. சில நேரங்களில் ஊழியர்களின் உடல்நலம் பாதிக்கப்படும் போது பாதுகாப்பு போலீஸாரின் கண்காணிப்பில் டாக்டர்கள் சிகிச்சை அளிப்பார்கள்.
மொபைல் போன்
பட்ஜெட் அச்சடிப்புப் பணி களை மேற்பார்வையிட வரும் நிதியமைச்சர் அருண்ஜேட்லியும் மூன்று அடுக்கு பாதுகாப்பு சோதனைகளுக்கு உள்ளாக வேண்டி இருக்கும் எனக் கூறப்படுகிறது. அப்போது மொபைல், லேப் டாப் உட்பட எந்தவிதமான எலக்ட் ரானிக் சாதனங்களையும் அமைச்சர் பயன்படுத்த அனுமதியில்லை.
அல்வா பார்ட்டி
பட்ஜெட் பணிகளைத் தொடங்கும் முன்பு அல்வா பார்ட்டி என்ற பெயரில் அங்கீகரிக்கப்படாத அரசு விருந்து அளிக்கப்படுகிறது. புனித யாத்திரைக்கு புறப்படுபவர்களை வழியனுப்ப அவரது குடும்பத்தார் செய்யும் சடங்குபோல் இந்த விருந்து அமைகிறது.
நல்ல காரியம்
அருண் ஜெட்லி கையால் அல்வா கிண்டப்படும் சுவையான சம்பவங்களும் நடந்துள்ளன. அவரும் அல்வா சாப்பிட்டு விட்டு அனைவருக்கும் அல்வா கொடுக்கச் சொல்வார். தித்திப்பான இனிப்பு சாப்பிட்டு விட்டு நிதியாண்டை தித்திப்பாக தொடங்க வேண்டும் என்பதற்காகவே இந்த அல்வா பார்ட்டி நடத்தப்படுகிறது.
பாஜக கால பட்ஜெட்
ஆங்கிலேயர் ஆட்சி காலம் முதல் லண்டனின் விடியல் நேரத்தை மனதில் வைத்து மாலை ஐந்து மணிக்கு பட்ஜெட் தாக் கல் செய்யப்பட்டு வந்தது. சுதந்திரத் துக்கு பிறகும் இந்த வழக்கம் தொடர்ந்தது. கடந்த 2001- ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது அப்போதைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆங்கிலேயர் நடைமுறையை மாற்றினார். இந்திய நாட்டின் பட்ஜெட்டை நமது நேரத்துக்கு ஏற்ப காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். அந்த சம்பிரதாயம் நீடிக்கிறது.
ஒருங்கிணைந்த பட்ஜெட்
2016ஆம் ஆண்டுவரை ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட் என இரண்டு பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இரண்டையும் ஒருங்கிணைத்து ஒரே பட்ஜெட் ஆக தாக்கல் செய்யப்படுகிறது. 2018 -2019 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்னும் சில வாரங்களில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா? அல்லது அல்வா மட்டுமே கொடுத்து விட்டு போவாரா என்று பார்க்கலாம்.