இன்பத் தகவல்.. தனி நபர் வருமான வரியில் சலுகைகள்.. பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு
டெல்லி: மத்திய அரசின் பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். இதில் தனி நபர் வருமான வரியில் மிகப்பெரிய சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2020-21 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணிகளில் நிதி அமைச்சக அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கு ஒரு நாள் முன்பாக, ஜனவரி 31ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும். இது ஒரு வழக்கமான நடைமுறைதான்.
பொருளாதார ஆய்வறிக்கையில் நாட்டின் பொருளாதார நிலை குறித்த அம்சங்கள் இடம் பெற்றிருக்கும். இதை வைத்து பட்ஜெட்டில் எந்த மாதிரியான திட்டங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்கப் போகும் என்பதை ஊகிக்க முடியும்.
சவாலான பட்ஜெட்
சமீப காலங்களிலேயே இந்த ஆண்டுக்கான பட்ஜெட் என்பது மிகவும் சவாலான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் பொருளாதார வளர்ச்சி விகிதம், மொத்த உள்நாட்டு உற்பத்தி-ஜிடிபி, போன்றவை தொடர்ந்து குறைந்து வருகின்றன. நுகர்வு குறைந்துள்ளதால் பணப்புழக்கம் சந்தையில் குறைந்து பொருட்களுக்கான விற்பனையும் குறைந்த அளவில் உள்ளது. மற்றொரு பக்கம் சில்லறை பணவீக்க விகிதம் அதாவது காய்கறி உள்ளிட்ட பொருட்களின் விலை, உயர்வு காரணமாக மக்கள் கையில் பணப்புழக்கம் இல்லை. மக்கள் கையில் பணப்புழக்கம் இருந்தால்தான் தேவை அதிகரிக்கும், அதன் வாயிலாக உற்பத்தி அதிகரிக்கும். உற்பத்தி அதிகரித்தால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இதுதான் பொருளாதாரத்தின் பால பாடம்.
பணப் புழக்கம்
இதுவரை முதலீடுகளுக்கான ஊக்கத்தை மட்டுமே நிதி அமைச்சகம் அவ்வப்போது அறிவித்து வந்தது. மக்கள் கையில் பணப்புழக்கமும் இல்லாதது, தொழில் வளர்ச்சியை பாதிக்கிறது என்பதை சற்று தாமதமாக புரிந்து கொண்டுள்ள நிதியமைச்சகம், பண பலத்தை அதிகரிக்கும் வகையில் வருமான வரி உச்சவரம்பில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று தீவிர யோசனையில் இருக்கிறது.
இப்போதைய வருமான வரி விகிதம்
தற்போது, ஆண்டுக்கு ரூ .2.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது, அதே நேரத்தில் ரூ .2.5-5 லட்சம் வரை வருமானம் ஈட்டும் நபர்களுக்கு, 5% வரி விகிதம், ரூ .5-10 லட்சம் வருமான பிரிவில் உள்ளவர்களுக்கு 20% வரி விதிக்கப்படுகிறது. ரூ .10 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்கள் 30% வரி செலுத்த வேண்டும். ரூ .1 கோடி, ரூ .2 கோடி மற்றும் ரூ .5 கோடி வருமான வரம்பில் உள்ளவர்கள் மூன்று அடுக்கு கூடுதல் வசூலின் கீழ் வருகிறார்கள்.
வரித் தளர்வு
இந்த நிலையை மாற்றி இரண்டரை லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான வருமானம் கொண்டவர்களுக்கு, ஒரே மாதிரி, 10% வருமான வரி விதிக்கலாம் என்ற திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நடுத்தர மற்றும் மத்தியதர வர்க்கத்தினருக்கு வரிச்சுமை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய நேரடி வரி விதிப்பு வாரியத்தின் முன்னாள் உறுப்பினர் அகிலேஷ் ரஞ்சன், அரசுக்கு அளித்த அறிக்கையிலும், வருமான வரி உச்சவரம்பை மாற்றி அமைப்பது தொடர்பான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும் அந்த அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாற்றம்
அதேநேரம், தொழில்துறை நிறுவனங்கள், 5 லட்சம் வரையிலான தனிநபர் ஆண்டு வருமானத்திற்கு, வருமான வரி வழக்கில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று நிதி அமைச்சகத்தை கேட்டுக் கொண்டு இருக்கின்றன. இதில் எந்த மாதிரி ஒரு முடிவை நிதி அமைச்சகம் எடுக்கப் போகிறது, என்று தெரியவில்லை. ஆனால், தனிநபர் வருமான வரி விகிதங்களில் மாற்றம் செய்யப் போவது, என்னவோ நிச்சயம் என்று அடித்துக் கூறுகிறது டெல்லி வட்டாரம்.