பட்ஜெட் 2015: பெண் குழந்தைகள் சேமிப்பு திட்டமான சுகன்யா ஸ்மிருத்திக்கு 100% வரி விலக்கு!
டெல்லி: இன்றைக்கு தாக்கல் செய்யப்பட்ட 67 ஆவது மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கான அறிவிப்புகளும் பெருமளவில் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவின் 67 ஆவது மத்திய பட்ஜெட் 2015-16 இன்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
பெண்கள், குழந்தைகள், விவசாயிகளை முன்னிறுத்தியே இந்த பட்ஜெட் வடிவமைக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள், குழந்தைகள் மேம்பாடு திட்டங்கள்:
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்திட்டங்களுக்காக ரூபாய் 10,351 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெண்கள் பாதுகாப்பு நிதி:
பெண்கள் பாதுகாப்பிற்கான நிர்பயா திட்டத்திற்கு ரூபாய் 1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்பயா திட்டம் என்றால் என்ன?
ஆபத்தில் இருக்கும் பெண்கள் தங்களது மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டால், அந்த அழைப்பு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு சென்றடைந்து , அவர்களுக்கு உடனடியாக பாதுகாப்பு மற்றும் தேவையான உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்க உதவுவதே நிர்பயா திட்டம் ஆகும்.
சேமிப்பு திட்டத்தின் மேல் வரி விலக்கு:
பெண் குழந்தைகள் சேமிப்பு திட்டமான "சுகன்யா ஸ்மிருத்தி" திட்டத்தின் வட்டி மீதான 80சி பிரிவிலான வரி முற்றிலுமாக விலக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோருக்கு இனிப்பான ஒரு செய்தியாக அமைந்துள்ளது.
சுகன்யா ஸ்மிருத்தி திட்டம்:
இத்திட்டத்தின் மூலமாக பெண் குழந்தைகளின் பெயரில் தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு துவங்கலாம்.
அக்கணக்கினை பெற்றோர் அல்லது பெண் குழந்தைகளின் காப்பாளர்கள் துவங்க முடியும்.
ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு பெண் குழந்தைகளுக்கு இந்த சேமிப்பு கணக்கினை துவங்க முடியும். குறைந்தபட்ச தொகையாக 1000 ரூபாய் செலுத்தி இக்கணக்கினை துவங்க வேண்டும்.
ஆரம்ப வட்டி விகிதம் 9.1 சதவீதம் ஆகும். அக்குழந்தைக்கு 21 வயது ஆனபிறகு பணம் முதிர்வுக் கால நிலையினை அடையும்.
பெண் குழந்தைகளுக்கு 10 வயதாவதற்கு முன்னாள் இக்கணக்கினைத் துவங்க வேண்டும். 14 வருடங்கள் தொடர்ச்சியான டெபாசிட்டின் பின்னர் பணம் பலமடங்காகத் திரும்பக் கிடைக்கும்.
மொத்தத்தில் பெண் குழந்தைகளை வைத்துள்ளவர்களின் வயிற்றில் பால்வார்த்துள்ளது இந்த மத்திய பட்ஜெட்.