அடித்தட்டு மக்களுக்கு புதிய வாழ்வு தரும் சூர்யோதயம்... பட்ஜெட் குறித்து பிரதமர் கருத்து
டெல்லி: நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அடித்தட்டு மக்களுக்கு புதிய வாழ்வு தரும் சூர்யோதயம் எனப் பாராட்டியுள்ளார் பிரதமர் மோடி.
மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு, முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. செவ்வாய் கிழமை ரயில்வே பட்ஜெட்டும் நேற்று முன்தினம் பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டன. அதன் தொடர்ச்சியாக நேற்று மோடி அரசின் முதல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்தார்.
இந்நிலையில், நேற்றைய பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கருத்துத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நம்பிக்கை ஒளி...
ஏழைகளுக்கும், சமுதாயத்தின் அடித்தட்டு பகுதி மக்களுக்கும் புதிய நம்பிக்கை ஒளியை தரும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.
சோதனையான காலகட்டம்...
சோதனையான இந்த காலகட்டத்திலும், தனது அரசு ஏழைகளுக்கும், நடுத்தர மக்களுக்கும் முடிந்த அளவு உதவிகளை செய்ய உறுதி எடுத்துள்ளது.
உறுதி...
நாடு இப்போது சந்தித்து வரும் சவால்களில் இருந்து விடுபடுவதற்கான எல்லாவித முயற்சிகளையும் இந்த அரசு மேற்கொள்ளும் என மக்களுக்கு உறுதி அளிக்கிறேன்.
சூர்யோதயம்....
இறக்கும் நிலையில் உள்ள நாட்டின் பொருளாதார நிலைக்கு ஒரு புதிய வாழ்வாகவும், அடித்தட்டில் உள்ள கடைசி மனிதனுக்கும் சூரியோதயமாகவும் இந்த பட்ஜெட் வந்துள்ளது.
நவீன தொழில்நுட்ப பயன்பாடு....
125 கோடி இந்தியர்களின் வலிமை மற்றும் ஆற்றல் காரணமாக தனது அரசு இந்தியாவை தட்டுப்பாட்டில் இருந்து நிச்சயம் வெளியே கொண்டுவரும். இந்த வலிமை நாட்டை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும். இந்த பட்ஜெட் இந்தியாவை திறமை மிக்கதாகவும், நவீன தொழில்நுட்ப பயன்பாட்டுக்கும் கொண்டு செல்லும்.
பொருளாதார வீழ்ச்சி...
கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. இந்த அரசு அமைந்ததும் பொருளாதார பிரச்சினையில் இருந்து நாடு விடுபடுவதற்காக பலகட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டது. இப்போது ரெயில்வே பட்ஜெட்டும், பொது பட்ஜெட்டும் நாடு சரியான திசையில் சென்று கொண்டிருப்பதை காட்டுகிறது.
தூண்டுகோல்...
இந்த பட்ஜெட் மக்கள் பங்களிப்புக்கும், மக்கள் சக்திக்கும் ஒரு தூண்டுகோலாகவும் இருக்கும். இதுவரை பின்தங்கியிருக்கும் அனைத்து பகுதிகளுக்கும் வளர்ச்சியை கொண்டு செல்லும்.
பெண்கள் மேம்பாடு...
விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டு இருக்கும் குடும்ப பெண்களுக்கு இந்த பட்ஜெட் ஒரு நம்பிக்கை ஒளியை தரும். மிகவும் முக்கியமாக பெண்கள் மேம்பாட்டுக்கும், பெண்களின் கல்விக்கும் இதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
பாராட்டு...
கங்கை சுத்திகரிப்பு, இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி, பாதுகாப்பு துறையில் தன்னிறைவு, விவசாயிகளுக்கான திட்டங்கள் என பல சிறப்பு அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது. இதற்காக நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.