மோடியின் கனவுத் திட்டமான ‘ஸ்மார்ட் சிட்டி’யாகப் போகிறது நம்ம ‘பொன்னேரி’!
டெல்லி: நேற்றைய பட்ஜெட்டில் புதிதாக நூறு நவீன நகரங்கள் அதாவது ஸ்மார்ட் சிட்டிகள் உருவாக்க நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. அவற்றில் ஒன்று தமிழ்நாட்டில் உள்ள பொன்னேரியில் அமைக்கப் பட உள்ளது.
மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு, முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. செவ்வாய் கிழமை ரயில்வே பட்ஜெட்டும் நேற்று முன்தினம் பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், மோடி அரசின் முதல் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜெட்லி நேற்று தாக்கல் செய்தார்.
அதில் பிரதமர் மோடியின் கனவுத்திட்டமான ‘ஸ்மார்ட் சிட்டி' உருவாக்கத்திற்கென ரூ. 7060 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. மேலும், நாட்டில் புதிதாக 7 தொழில் நகரங்கள் உருவாக்கப்படும் எனவும் அருண்ஜெட்லி உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில், அவற்றில் ஒன்று தமிழகத்தில் உள்ள திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அமைக்கப் பட உள்ளது. மத்திய அரசு பொன்னேரி உள்பட 100 நவீன சிறு நகரங்கள் அமைக்க முடிவு செய்திருப்பதை தமிழக அரசு வரவேற்றுள்ளது. மேலும், தமிழகத்தில் ஜவுளி மண்டலம் அமைக்கவும் மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இது தவிர சிறப்பு பொருளாதார மண்டலங்களை சீர்படுத்தவும், ஹார்டுவேர் உற்பத்தியை மேம்படுத்தவும் சிறப்பு கவனம் செலுத்தப்படும் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.