சுதந்திர இந்தியாவில் முதல் முறை.. ரயில்வே பட்ஜெட் நடைமுறை அகற்றம்.. ஒருங்கிணைந்த பட்ஜெட் தாக்கல்
டெல்லி: சுந்திர இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறை ஒழிக்கப்பட்டு, ஒருங்கிணைந்த பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
பொது பட்ஜெட்டும், ரயில்வே பட்ஜெட்டும் தனித்தனியாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்து வந்தது. இந்த நிலையில் 92 வருட வழக்கத்தை இந்த ஆண்டு மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது.
அதன்படி இந்த 2 பட்ஜெட்டுகளும் இணைக்கப்பட்டு ஒரே பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இது தவிர பொது பட்ஜெட்டும் வழக்கமாக பிப்ரவரி கடைசி நாளில் தாக்கல் செய்யப்படும் என்ற நடைமுறையும் மாற்றப்பட்டுள்ளது. இதன்படி பிப்ரவரி 1ம் தேதியான இன்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி நாடாளுமன்றத்தில் 2017-18ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்கிறார்.
வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி காலத்தில்தான் மாலையில் தாக்கல் செய்யப்பட்டுக் கொண்டிருந்த பட்ஜெட் காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படும் நடைமுறை கொண்டுவரப்பட்டது. பிரிட்டீஷ் ஆட்சி காலத்து நடைமுறையான ரயில்வே பட்ஜெட் பழக்கமும் தற்போது அகற்றப்பட்டுள்ளது.
முன்னதாக, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நிதியமைச்சர் அருண்ஜெட்லிக்கு எழுதியிருந்த கடிதத்தில் சுமார் ரூ.1.19 லட்சம் கோடி ஒதுக்கீட்டில் தனியாக சிறப்பு பாதுகாப்பு நிதி உருவாக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதை ஏற்று மத்திய நிதியமைச்சகம் தனியாக ரயில்வே பாதுகாப்பு நிதி உருவாக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.