இனி ரயில்வேக்கு தனி பட்ஜெட் இல்லை- பொது பட்ஜெட்டுடன் இணைக்க கேபினட் ஒப்புதல்!
டெல்லி: ரயில்வே துறைக்கு என தனியே பட்ஜெட் செய்யும் நடைமுறையை கைவிட மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் பிப்ரவரி இறுதிக்கு முன்னதாகவே பொது பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய பட்ஜெட், பொதுவாக பிப்ரவரி மாதத்தின் கடைசி வேலை நாளில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்த நடைமுறையை மாற்றி, முன்கூட்டியே தாக்கல் செய்ய பிரதமர் நரேந்திர மோடி யோசனையை முன்வைத்துள்ளார்.
மேலும் ரயில்வே துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறையை கைவிடவும் மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டது.
பின்னர் ரயில்வே பட்ஜெட்டை பொதுபட்ஜெட்டுடன் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மேலும் பொதுபட்ஜெட்டை பிப்ரவரி மாதம் இறுதிக்கு முன்னரே தாக்கல் செய்யவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.