முத்தலாக் முறையை ஒழிக்க வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி : இஸ்லாமியர்கள் விவாகரத்து பெற பயன்படுத்தும் முத்தலாக் முறைக்கு தடை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
முஸ்லிம் தனிநபர் சட்டத்தின்படி திருமண பந்தத்தை விட்டு விலக முத்தலாக் என்று கூறுவது அந்த மதத்தின் சட்டமாகும். இந்த சட்டத்தை ஆண்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் இந்த முத்தலாக் விவகாரம் பின்பற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கடந்த ஆண்டு வழக்கு தொடுத்துள்ளார்.
இந்நிலையில் மத ரிதீயிலான நம்பிக்கைகளில் நீதிமன்றங்கள் தலையிட கூடாது என்றும் முத்தலாக் விவகாரம் குறித்து தங்கள் புனித நூலான திருக்குரானில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் முஸ்லிம் அமைப்புகள் மன்றாடி வந்தன. எனினும்
இந்த முத்தலாக்கை மனைவிக்கு போனில் கூறுவது, வாட்ஸ் ஆப் மூலம் அனுப்புவது என்பது அதிகரித்த வண்ணம் இருந்தது.
இதனிடையே முத்தலாக் விவகாரம் சட்டத்துக்கு புறம்பானது என்று கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் 15-ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதி வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கடந்த மாதம் 24-ஆம் தேதி அறிவித்தது.
இதையடுத்து இந்த கூட்டத்தொடரில் முஸ்லிம் பெண்களை பாதிப்புக்குள்ளாக்கும் முத்தலாக் விவகாரத்தில் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. இதில் இஸ்லாமியர்கள் விவாகரத்து பெற பயன்படுத்தும் முத்தலாக் முறைக்கு தடை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதனால் விரைவில் முத்தலாக் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். மேலும் இஸ்லாமியர்கள் முத்தலாக் கூறி விவகாரத்து பெற்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் இயற்றப்படும் என்று தெரிகிறது.