கருப்பு பணத்தை திருப்பி கொடுத்தால் 60% மட்டுமே அபராதம்.. மத்திய அமைச்சரவை புது திட்டம்?
பணம் இல்லாத பரிவர்த்தனை நடவடிக்கைகளை நாழு முழுவதும் அமல்படுத்தும் திட்டம் குறித்து இறுதி முடிவு எடுப்பதில் மத்திய அமைச்சரவையில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
டெல்லி: ரொக்கப் பணம் இல்லாத நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும், இருப்பினும் அதனை செயல்படுத்துவது தொடர்பாக குழப்பம் நீடித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் கருப்பு பணம் மீதான அபராதத்தை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற கூட்டம் நடப்பதால் விதிமுறைப்படி, அமைச்சரவை முடிவுகளை வெளியே சொல்ல கூடாது. எனவே இதுகுறித்து அறிவிப்பு வெளியாகவில்லை என கூறப்படுகிறது.
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக கடந்த 8-ஆம் தேதி நள்ளிரவு முதல் 500,1000 ரூபாய் அதிகமதிப்புள்ள நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்பினால் ஏழை-எளிய மக்கள் அன்றாடம் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.
இதற்கு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ்,இடதுசாரிகள்,அதிமுக-திமுக என அனைத்துக் கட்சிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இருப்பினும் மத்திய அரசு அறிவிக்கப்பட்ட முடிவிலிருந்து பின்வாங்கும் எண்ணமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. ஆனாலும், விவசாயம், மருத்துவம் உள்ளிட்ட சில சேவைகளுக்கு விதிகளை தளர்வு செய்துள்ளது.
அமைச்சரவை கூட்டம்
இந்நிலையில் கருப்பு பணத்தை ஒழிக்க ரொக்கமில்லாத நடவடிக்கைகளை மேம்படுத்தலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது. ஆனாலும், அதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. எனவே, இத்திட்டம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வியாழக்கிழமை விவாதிக்கப்பட்டது.
வருமான வரி திருத்தம்
அதில் பல்வேறு கருத்துக்கள் அனைத்து அமைச்சர்களாலும் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, ரொக்கமில்லாத பரிவர்த்தனை நடைமுறைப்படுத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், இந்தக் கூட்டத்தில் கணக்கில் வராத பணம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தால் அதற்கு வருமான வரி விதிப்பதற்கான திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கணக்கில் வராத பணத்திற்கு 60 சதவீதம் மட்டும் அபராதம் விதிக்கலாம் என திட்டமாம். முன்பு 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு கூறியிருந்தது. இதனால் கருப்பு பண முதலைகள் பணத்தை திருப்பி செலுத்தாமல் எரிப்பது, அழிப்பது போன்றவற்றில் ஈடுபட வாய்ப்புள்ளது என மத்திய அரசு நினைக்கிறது. எனவே அபராதத்தை குறைத்துக்கொண்டு பணத்தை திரும்ப பெறலாம் என்பது திட்டமாம்.
ஜன்தன் கணக்கில் குவியல்
ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டபிறகு இம்மாதம் 23-ம் தேதி வரை நாடு முழுவதும், ஜன் தன் வங்கிக் கணக்கில் ரூ. 21 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தத் தொகையில் அதிக அளவில் மேற்கு வங்க மாநிலத்தில் டெப்பாசிட் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக வருகிற 28-ம் தேதி எதிர்க்கட்சிகள் அனைத்தும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன. இந்திய பொருளாதாரத்தை இணைய மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவும், கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாகவும், ஊழலை தடுக்கவும் 500,1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்திருப்பதாக மத்திய அரசு தொடர்ந்து கூறிவருகிறது.
ஜேட்லி ஆலோசனை
முன்னதாக, நிதியமைச்சர் அருண்ஜேட்லி, பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகளின் உயர் அதிகாரிகளுடன் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தியதாகவும் தெரிகிறது. தற்போது, நடைமுறையில் இருக்கும் ரூபாய் நோட்டுக்களால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருவதாகவும், இதனால் டிஜிட்டல் கரன்சிகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.