மத்திய அமைச்சரவை நாளை மாற்றம்: கூட்டணி கட்சியினருக்கும் வாய்ப்பு?
டெல்லி: நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் மத்திய அமைச்சரவை முதன்முறையாக நாளை மாற்றியமைக்கப்படுகிறது.
மத்திய அரசில் தற்போது 22 கேபினட் அமைச்சர்களும் 22 இணை அமைச்சர்களும் உள்ளனர். அருண் ஜேட்லி, நிதின் கட்காரி, பிரகாஷ் ஜவடேகர், நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் உள்ளிட்டோரிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன.
இந்நிலையில் மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். மொத்தம் 10 பேர் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
கோவா முதல்வராக இருக்கும் மனோகர் பரிக்கர் மத்திய அமைச்சராக நியமிக்கப்படுவார் என்பது உறுதியாகி உள்ளது. அவருக்கு பாதுகாப்புத் துறை ஒதுக்கப்பட இருக்கிறது.
மேலும் பாஜக மூத்த தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி, இளைஞர் அணித் தலைவர் அனுராக் தாகுர், முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவின் மகன் ஜெயந்த் சின்ஹா ஆகியோரும் அமைச்சரவையில் இடம்பெறக் கூடும் என்கின்றன பாஜக வட்டாரங்கள்.
கூட்டணிக் கட்சிகளான சிவசேனா, தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் நாளைய அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.
அதே நேரத்தில் தற்போதைய அமைச்சரவையில் உள்ள சிலர் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக புதுமுகங்கள் சேர்க்கப்படலாம் எனவும் தெரிகிறது. ஜனாதிபதி மாளிகையில் நாளை பகல் 1 மணியளவில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறக் கூடும் எனத் தெரிகிறது.