டார்ஜிலிங் சுக்னா போர் நினைவிடத்தில் ராணுவ தளவாடங்களுடன் ஆயுத பூஜை நடத்திய ராஜ்நாத்சிங்
சுக்னா: மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் சுக்னா போர் நினைவிடப் பகுதியில் ராணுவ தளவாடங்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று சாஸ்திரா பூஜை எனப்படும் ஆயுத பூஜை நடத்தினார்.
மேற்கு வங்கம், சிக்கிம் மாநில எல்லை நிலவரங்களை ஆய்வு செய்ய 2 நாட்கள் பயணமாக சனிக்கிழமை சுக்னா சென்றார் ராஜ்நாத்சிங். அங்கு தசரா கொண்டாட்டங்களில் பங்கேற்றார்.
அப்போது பேசிய ராஜ்நாத்சிங், அண்டை நாடுகளுடன் சுமூக உறவுகளை முன்னெடுத்துச் செல்லவே இந்தியா விரும்புகிறது. தங்களது இன்னுயிரை கொடுத்து எல்லை காக்கும் ராணுவ வீரர்களால் தேசம் பெருமைப்படுகிறது என தெரிவித்திருந்தார்.
கேட்டுச்சா சீனா? பாரத் மாதா கீ ஜே... ராஜ்நாத்சிங் பயணத்தில் உரத்து முழங்கிய கிழக்கு எல்லை வீரர்கள்!
சிக்கிம் எல்லை பயணம்
இதனைத் தொடர்ந்து இன்று சிக்கிம் மாநிலத்தில் சீனா எல்லையில் ராணுவ முகாமில் ஆயுத பூஜை கொண்டாட ராஜ்நாத்சிங் திட்டமிட்டிருந்தார். அப்பகுதியில் நிலவிய மோசமான வானிலையால் ராஜ்நாத்சிங்கால் அங்கு செல்ல இயலவில்லை.
ராணுவ தளவாடங்களுக்கு பூஜை
இதனால் சுக்னா போர் நினைவிடப் பகுதியில் ராணுவ தளவடாங்களை வைத்து ஆயுத பூஜையை நடத்தினார் ராஜ்நாத்சிங். இந்த நிகழ்ச்சியில் ராணுவ தளபதி நரவனேவும் உடன் இருந்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத்சிங், சீனாவுடனான எல்லை பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறோம். ஆனால் இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தை கூட ஆக்கிரமிக்க நமது ராணுவ வீரர்கள் அனுமதிக்கமாட்டார்கள் என்றார்.
|
சீரமைப்பு சாலை
மேலும் சிக்கிமின் கிழக்கில் தேசிய நெடுஞ்சாலையில் 19.85 கி.மீ நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள மாற்று சீரமைப்பு சாலையை ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்பணித்தார். இந்த பாதையில் ஏற்கனவே அமைக்கப்பட்ட சாலை இயற்கை பேரழிவுகளால் சேதம் அடைந்ததால், சீரமைக்க வேண்டிய தேவை எழுந்தது. பொதுவாக சிக்கின் கிழக்குப் பகுதி மொத்தத்துக்கும், குறிப்பாக நதுல்லா பகுதியில் பாதுகாப்பு தொடர்பாக தயார் நிலையை மேம்படுத்துவதற்கான முக்கியமான இணைப்பாகவும் இந்த சாலை திகழ்கிறது.
கட்டமைப்பு திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்
இந்த நிகழ்வில் பேசிய ராஜ்நாத்சிங், பிரதமரின் வடகிழக்கு கொள்கையின் வழியில் கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களை விரைவுபடுத்தப்படுத்த மத்திய அரசு தீர்மானித்திருப்பதை அவர் வலியுறுத்தினார். இதில் பேசிய சிக்கிம் மாநில முதல்வர் பிரேம் சிங் தாமங், புதிய சீரமைப்புப் பாதையானது சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையிலும், மாநிலத்தின் சமூக பொருளாதாரா நிலையை உயர்த்தும் வகையிலும் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.