மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் அனில் மாதவ் தவே காலமானார்… நாளை இந்தூரில் இறுதிச் சடங்கு
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே காலமானார். நாளை மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.
டெல்லி: மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்துள்ளார்.
பிரதமர் மோடி அமைச்சரவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பணியாற்றி வந்தார். 60 வயதான இவருக்கு உடல் நலக் கோளாறு காரணமான இன்று காலை திடீரென மரணம் அடைந்துள்ளார். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இவர் பாஜகவின் முக்கிய தலைவராக திகழ்ந்து வந்தார். கடந்த சில வாரங்களாகவே உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தின் ராஜ்ய சபா எம்பியாக இருந்த வந்த அனில் தவேவிற்கு 2016ம் ஆண்டு தனிப் பொறுப்பாக சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் பிரதமர் மோடியால் வழங்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரச்சாரகராக இருந்த இவர் மத்திய பிரதேசத்தில் பாஜகவின் முக்கிய தலைவராக இருந்து கட்சியை வளர்த்தவர்.
மறைந்த அமைச்சரின் உடல் தலைவர்களின் அஞ்சலிக்காக டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை வைக்கப்பட உள்ளது. பின்னர், சொந்த மாநிலமான மத்திய பிரதேச மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்தூரில் நாளை காலை 9 மணிக்கு அவரது இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.