ஜல்லிக்கட்டு நடத்த 2 நாட்களில் நல்ல அறிவிப்பு வெளியாகும்: பிரகாஷ் ஜவடேகர் உறுதி
டெல்லி: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி வழங்குவது குறித்து 2 நாட்களில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் வீரவிளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியான ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளை நடத்துவது தொடர்பாக இரண்டு நாட்களில் நல்ல அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும்.
கர்நாடகம், மகாராஷ்டிரம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் காளைகளை மையமாக வைத்து நடத்தப்படும் போட்டிகள் பாரம்பரியமிக்கது. ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த மத்திய அரசு சில வழிகளை கண்டுபிடித்துள்ளது. பாரம்பரியம்,கலாச்சாரத்தை காப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இன்னும் 2 நாட்களில் ஜல்லிக்கட்டு தொடர்பாக நல்ல அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவித்தார்.
காளைகள் துன்புறுத்துவதாக கூறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்தது. இந்த தடையை நீக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில் 2 நாட்களில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என்று மத்திய அமைச்சர் கூறியிருப்பதால் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துபவர்கள் அதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுப்ட்டுள்ளனர். மாடு பிடி வீரர்களும் தங்களை தீவிரம்க தாயார் படுத்தி வருகின்றன.