40,000 ரோஹிங்கியா முஸ்லீம்களை நாடு கடத்த இந்தியா திட்டம்.. நெருக்கடியில் அகதிகள்
இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள சுமார் 40 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லீம்களை நாடு கடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
டெல்லி: இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள சுமார் 40,000 ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளை நாடு கடத்த இந்திய அரசு திட்டமிட்டு வருகின்றது.
இந்திய அரசின் புள்ளிவிவரப்படி 14,000 ரோஹிங்கியா அகதிகள் மட்டுமே ஐ.நா.அகதிகள் ஆணையத்திடம் பதிவு செய்த அகதிகளாக இந்தியாவில் வசிக்கின்றனர். நாடு கடத்தப்படுவதாக கூறப்படும் சுமார் 40,000 அகதிகள் சட்ட விரோதமாக இந்தியாவில் உள்ளதாக இந்திய அரசு குறிப்பிடுகின்றது.
இதுதொடர்பாக மியான்மர் மற்றும் வங்கதேச அரசுகளிடையே ராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக இந்திய உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தட்வாலியா தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜ்ஜூ, இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரைக் கண்டறிந்து நாடு கடத்த சிறப்புப் படை அமைக்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஜம்மு, அசாம், உத்திர பிரதேசம், ஹரியானா, டெல்லி, ஐதராபாத், ராஜஸ்தான், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோஹிங்கியா அகதிகள் வசித்து வருகின்றனர்.
1982 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மியான்மர் குடியுரிமைச் சட்டத்தின் படி ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு மியான்மரில் குடியுரிமை மறுக்கப்பட்டு வருகின்றது. புத்த மதத்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மியான்மரில் 134 இனக் குழுக்களுக்கு குடியுரிமை அளிக்கப்பட்டிருந்தாலும், ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்க தேசத்திலிருந்து வந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் என்றே மியான்மர் அரசு முத்திரைக் குத்துகிறது.
இதன் காரணமாக மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லீம்களை மையப்படுத்திய கலவரங்களும் தாக்குதல்களும் தொடர்ந்து வருகின்றது. இதனால் ரோஹிங்கியா முஸ்லீம்கள் பல்வேறு நாடுகளுக்குத் தஞ்சம் கோரிச் செல்லும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தற்போது இந்தியாவிலும் நெருக்கடி முற்றுகிறது.