டெல்டா விவசாயிகள் தப்பினர்.. தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் திட்டம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: தமிழகத்தில் ஷேல் எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், பூமிக்கு அடியில் மீத்தேன் எரிவாயு அதிகமாக இருப்பதாக கூறி, எரிவாயு எடுக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர்.
இதற்கு நடுவேயும், குத்தகை அடிப்படையில் நிலங்களை அரசு கையகப்படுத்தி வந்தது. ஆனால் போராட்டங்களால் மேற்கொண்டு திட்டத்தை முன்னெடுக்க முடியாமல் நில கையகப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன.
இந்த நிலையில், டெல்லியில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில், ஷேல் எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட முடிவு செய்துள்ளது. டெல்டா மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு மற்றும், நில கையகப்படுத்துதலில் நிலவிய குழப்பம் போன்றவற்றை கருத்தில் கொண்டு, திட்டத்தை கைவிடுகிறோம். திட்டம் தொடர்பாக இனிமேல் ஆய்வுகளும் நடத்த மாட்டோம்.
அதேநேரம், கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி தர வேண்டும், ஒத்துழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம். கரும்பிலிருந்து எத்னால் எரிபொருள் தயாரிக்கும் திட்டத்திற்கும், தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும். கெயில் எரிவாயு குழாய் பதிப்புக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த கேரளா இப்போது, பாதகம் இல்லை என்பதால் ஒத்துழைப்பு தர முன்வந்துள்ளது. தமிழகமும் அதேபோன்ற ஒத்துழைப்பை தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
இதனிடையே, அரசின் முடிவுக்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் பாராட்டுக்களையும், வரவேற்பையும் தெரிவித்து வருகிறார்கள்.