ஸ்விஸ் வங்கிகளில் கறுப்புப் பணம்... 100 பேர் கணக்குகள் சிக்கின!
டெல்லி: ஸ்விட்சர்லாந்து நாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பல ஆயிரம் கோடி கறுப்புப் பணத்துக்கு சொந்தமான 100 பேரின் விவரங்களை மத்திய அரசு சேகரித்துள்ளது.
அவர்களிடமிருந்து கணக்கு விவரங்களைப் பெற்று பணத்தை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு துரிதப்படுத்தி யுள்ளது. ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட சில நாடுகள், இந்த கறுப்புப் பண கணக்கு விவரங்கள் தரத் தயங்கிய நிலையில், அங்குள்ள வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கியுள்ளவர்கள் பட்டியல் ஒன்றை கடந்த நிதி ஆண்டில் சி.பி.டி.டி. என்னும் மத்திய நேரடி வரிகள் வாரியம் பெற்றுள்ளது.
இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 100-க்கும் மேற்பட்டோரை தொடர்பு கொண்டு, அவர்கள் தங்கள் ஸ்விஸ் வங்கி கணக்கு விவரங்களை தந்து விட்டால், அவர்கள் மீது வரி ஏய்ப்பு சட்டத்தின்படிதான் நடவடிக்கை எடுக்கப்படும், வேண்டுமென்றே வரி ஏய்ப்பு செய்தவர்கள் என்ற வகையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படாது என கூறி தகவல்கள் திரட்டுமாறு வருமான வரித்துறைக்கு சி.பி.டி.டி. யோசனை கூறியுள்ளது.
இந்த 100 பேர் பட்டியலில் சென்னை, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களை சேர்ந்தவர்களின் பெயர் இடம் பெற்றிருப்பதாகத் தெரிகிறது.
ஆனால் இவர்கள் யார் யார் என்பதை இப்போதைக்கு வெளியிடும் திட்டமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.