ரூ 640 கோடி நஷ்டஈடு கேட்டு நெஸ்லே நிறுவனம் மீது மத்திய அரசு வழக்கு!
டெல்லி : பாதுகாப்பற்ற உணவுப் பொருளான மேகியை முறையற்ற வகையில் விற்பனை செய்ததற்காக 'நெஸ்லே இந்தியா' நிறுவனத்திடமிருந்து ரூ 640 கோடி இழப்பீடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளது மத்திய அரசு.
மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளில் அளவுக்கு அதிகமாக காரீயமும், ரசாயன உப்பான மோனோ சோடியம் குளுட்டாமேட்டும் சேர்க்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தது. இதைத் தொடர்ந்து மேகி நூடுல்ஸ் உணவுப் பொருட்கள் மீது தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் ஆய்வக சோதனை மேற்கொண்டன.
தடை
அப்போது அவற்றில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன பொருட்கள் அதிகம் சேர்க்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் நூடுல்ஸ்கள் பாதுகாப்பற்றவை மற்றும் மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பவை என்றும் கூறி மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் (FSSAI) நாடு முழுவதும் தடை செய்தது.
வழக்கு
இந்நிலையில் சட்டம் இயற்றப்பட்டு 30 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்பிரிவை (Section 12-1-D) முதல் முறையாக நெஸ்லே நிறுவனம் மீது பயன்படுத்தி தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் (National Consumer Disputes Redressal Commission - NCDRC) வழக்கு தொடர்ந்துள்ளது மத்திய அரசு.
ரூ 640 கோடி
இதில் மக்களின் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் மேகி நூடுல்சைத் தயாரித்து, முறையற்ற வர்த்தகத்தில் ஈடுபட்டதற்காக ரூ 640 கோடியை இழப்பீடாக நெஸ்லே நிறுவனம் தர வேண்டும் என்று கோரியுள்ளது.
இழப்பீடு கேட்க முழு உரிமை உண்டு
இதுகுறித்து, மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், "நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான சட்டத்தில், முறையற்ற வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு எதிராக, புகார் கொடுக்கும் உரிமை, மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது. இந்த சட்டத்தில் உள்ள, 12 - 1 டி என்ற பிரிவு, இதற்கு அனுமதி அளிக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக, இந்த சட்டம் அமலில் இருந்தாலும், இதுவரை, இதை பயன்படுத்தி, புகார் எதுவும் அளிக்கப்பட்டது இல்லை. தற்போது, மேகி நுாடுல்ஸ் விவகாரத்தில், முதன்முறையாக இந்த சட்டத்தின் கீழ், வழக்கு தொடர்ந்துள்ளோம். மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது," என்றனர்.
இன்னும் நோட்டீஸ் வரல..
இதுகுறித்து நெஸ்லே இந்தியா நிறுவனம் விடுத்துள்ள அறி்க்கையில், "இந்த வழக்கு குறித்து எங்களுக்கு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ நோட்டீசும் வரவில்லை. மீடியாவில் வரும் செய்திகள்தான் எங்களுக்குத் தெரியும். தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்திலிருந்து கடிதம் வந்தால் அதற்கு உரிய முறையில் பதிலளிப்போம்," என்று கூறியுள்ளது.