மேற்கு வங்கத்தில் அமித்ஷா... பாதுகாப்பை உறுதி செய்ய மாநில அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு
கொல்கத்தா: பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா இன்று மேற்கு வங்கத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால் அவருக்கான பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அண்மையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது அவரது பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. மாநில ஆளுநரும் மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி இருந்தார். இதனை தொடர்ந்து மத்திய அரசுக்கும் மேற்கு வங்க மாநில அரசுக்கும் இடையே மோதல் வெடித்தது.
மே.வங்கத்தில் சிபிஎம்-க்கும் அதிர்ச்சி. அமித்ஷா முன்னிலையில் பாஜக ஜோதியில் ஐக்கியமாகும் எம்.எல்.ஏ.
இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் அமித்ஷா இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி ஆகியவற்றின் எம்.எல்.ஏக்கள் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணையவும் உள்ளனர்.
இதனிடையே அமித்ஷா பயணத்தின் போது எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் அவருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மேற்கு வங்க அரசுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. மேற்கு வங்க டிஜிபி, மாநில தலைமை செயலாளர் ஆகியோருடன் உள்துறை அமைச்சக அதிகாரிகள் இது தொடர்பாக வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாகவும் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போதுதான் அமித்ஷாவின் பாதுகாப்பு தொடர்பான உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.