சமையல் எரிவாயு மானியம் ரத்து? மத்திய அரசு தடாலடி விளக்கம்!
சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்படுவதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லி : சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்பட மாட்டாது என்றும் யாருக்கு மானியம் தேவையில்லை என்று அரசு முறைப்படுத்தும் என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதியளித்துள்ளார்.
சமையல் எரிவாயு மானியம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ரத்து செய்யப்படுவதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் ராஜ்யசபாவில் இன்று எதிர்க்கட்சிகள் அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டன. ராஜ்யசபா துணைத்தலைவர் குரியன் மேஜை அருகே வந்து எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டன.
அப்போது பதிலளித்த அமைச்சர் தர்மேந்திர பிரதான், மாதா மாதம் மானியம் குறைத்து மார்ச் மாதத்தில் இருந்து முழுவதும் மானியம் ரத்து செய்யப்படும் என்பது ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவு தான் என்றார்.
ஏற்கனவே செய்த முடிவுபடி மாதா மாதம் மானியம் குறைக்கப்படும் என்றும், இது திடீரென எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும் தெரிவித்தார். மேலும் எதிர்ப்புகள் இருக்கும் பட்சத்தில் மானியத்தை எவ்வளவு நாட்கள் வழங்குவது என்று பரிசீலித்து அதனை நீட்டிக்க ஆலோசிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் அமளி அர்த்தமற்றது என்று குறிப்பிட்ட அமைச்சர் தர்மேந்திர பிரதான் மானியம் ரத்து செய்யப்பட மாட்டாது என்றும் யாருக்கு மானியம் அளிப்பது என்று சீரமைக்கப்படும் என்றும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.