தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் இன்னும் செயல்படுத்தப்படவில்லை- மத்திய அமைச்சர்
தமிழகத்தில் மீத்தேன் உள்பட எந்த வித திட்டங்களும் இன்னும் தொடங்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
டெல்லி: தமிழகத்தில் மீத்தேன் உள்பட எந்தவித திட்டங்களும் இதுவரை தொடங்கப்படவில்லை என்று லோக்சபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்கப்படும் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இதனால் விவசாயம் பாதிக்கப்படும் என்று அப்பகுதி மக்கள் கடுமையான போராட்டங்களை நடத்தினர்.
ஷேல் கேஸ் எடுக்கும் திட்டம்
இதுபோல் கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி சார்பில் எண்ணெய் குழாய் பதிக்கும் பணிகளின் போது தீப்பிடித்து எரிந்தது. இதனால் இந்த திட்டத்துக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மீத்தேன் மற்றும் ஷேல் கேஸ் எடுக்கும் திட்டங்களுக்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
பட்ஜெட் கூட்டத் தொடர்
இந்நிலையில் கடந்த ஆண்டு 31 பொதுத் துறை நிறுவனங்கள் மேற்கண்ட திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி கொடுத்தது. இது தமிழக மக்கள் அதிர்ச்சி அடைய செய்தது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
நெடுவாசல் திட்டம்
அதற்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளிக்கையில் , தமிழகத்தில் மீத்தேன், ஷேல் கேஸ் உள்பட் எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.
நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டங்கள் மாநில அரசு, சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பிறகே உற்பத்தி தொடங்கப்படும்.
தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
31 நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்துவிட்டதாலேயே இந்த திட்டங்கள் தொடங்கிவிட்டதாக அர்த்தம் இல்லை. கதிராமங்கலம் ஓஎன்ஜிசி சார்பில் புதிய திட்டம் தொடங்கும் எண்ணம் ஏதும் இல்லை என்றார் தர்மேந்திர பிரதான். இதன் மூலம் மத்திய அரசு இந்த திட்டங்களை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளதாகவே கருதப்படுகிறது.