இஸ்லாமிய இறைச்சி வியாபாரியைக் கொன்ற குற்றவாளிகளுக்கு மாலை, மரியாதை செய்த மத்திய அமைச்சர்
இஸ்லாமிய இறைச்சி வியாபாரியைக் கொன்ற கொலைக் குற்றவாளிகள் ஜாமினில் வெளிவந்ததைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா குற்றவாளிகளை மாலை மரியாதை செய்து வரவேற்ற சம்பவம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம், ராம்காரில் உள்ள ஹாசாரிபாக் பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி அலிமுதீன் அன்சாரி என்ற இஸ்லாமிய இறைச்சி வியாபாரி, பசு பாதுகாப்பு என்ற பெயரில் குண்டர்களால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெற்ற இந்த படுகொலைக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன.
இந்த கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் மொத்தம் 12 பேர் குற்றம் சாட்டப்பட்டனர். அதில் ஒருவர் பதினெட்டு வயது பூர்த்தி அடையாதவர் என்பதால் அவர் சிறார் குற்ற நடைமுறைச்சட்டப்படி விசாரிக்கப்பட்டார். மேலும், இந்த வழக்கு விசாரணை முடிவில் சிறப்பு நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் குற்றம் சாட்டப்பட்ட 11 பேர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், சிறையில் இருந்த குற்றவாளிகள் 11 பேரில் 8 பேர் அண்மையில், ஜாமினில் வெளியே வந்துள்ளனர். அவர்கள் ஜாமினில் வெளிவந்ததை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். இதன் உச்ச கட்டமாக ஹாசாரிபாக் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் உள்நாட்டு விமானங்கள் போக்குவரத்து துறை அமைச்சருமான ஜெயந்த் சின்ஹா ஜாமினில் வெளிவந்த கொலைக்குற்றவாளிகளை வரவேற்று புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். இது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Felicitation of Cow terrorists by union minister Jayant Sinha is a clear endorsement of violence& terrorism by this govt in the name of cow.
— Arfa Khanum Sherwani (@khanumarfa) July 6, 2018
If Modi still believes in indian constitution or there’s any shame left he should immediately expel Sinha and order enquiry against him. pic.twitter.com/AQnsfjM0oG
மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, ஜாமினில் வெளிவந்த கொலைக் குற்றவாளிகளை மாலை மரியாதை செய்து வரவேற்றதோடு மட்டுமல்லாமல் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார். அந்த புகைப்படம் இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சிறப்பு விரைவு விசாரணை நீதிமன்றம் தவறாக ஆயுள் தண்டனை வழங்கிவிட்டது என்று நான் தொடர்ந்து கூறிவருகிறேன். இந்த விஷயத்தில் சிறப்பு விரைவு விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை சரிசெய்ய உயர் நீதிமன்றம் மேலுமுறையீடு மனுவாக எடுத்துக்கொண்டு விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜெயந்த் சின்ஹாவின் மற்றொரு டிவிட்டில், நான் சட்டத்தின் ஆட்சியையும் நீதி முறையை முழுமையாக நம்புகிறேன். சட்டத்தின் இந்த நடைமுறையை நான் கௌரவிக்கப்படும் போதெல்லாம், துரதிருஷ்டவசமாக என்னுடைய செயல்களைப் பற்றி பொறுப்பற்ற முறையில் கருத்து கூறப்படுகின்றன. அவர்கள் குற்றமற்றவர்களாக இருக்கிறார்கள். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜெயந்த் சின்ஹா தன்னுடைய தொடர் டிவிட்டில், ராம்கார் வழக்கில், மரியாதைக்குரிய ராஞ்சி உயர் நீதிமன்றம் முதல் நீதிமன்ற முறையீட்டில் குற்றவாளிகளின் தீர்ப்பை நிறுத்தியுள்ளது. மேலும், அவர்களுடைய பெயில் கோரிக்கையை ஏற்றுகொண்டு ஜாமினில் விடுவித்துள்ளது. இந்த வழக்கு மீண்டும் ஒரு முறை விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கொலைக் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட ஜாமினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடப் போவதாக கொலையான அலிமுதீன் அன்சாரியின் மனைவி மரியம் கதுன் தெரிவித்துள்ளார்.
பசு பாதுகாப்பு என்ற பெயரில் கும்பலாக தாக்குதல் நடத்தி கொலை செய்பவர்கள் மீது மத்திய அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்கும் நெறு உறுதி கூறிய நிலையில், மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா ஜாமினில் வெளிவந்த பசு பாதுகாப்பு குண்டர்களுக்கு வரவேற்பு அளித்துள்ளது நாடு முழுவதும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.