ஆர்எஸ்எஸ், பாஜகவினரைக் கொல்ல பினராயி விஜயன் நிதியுதவி.. மத்திய அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
கேரள அரசு பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினரைக் கொல்ல நிதியுதவி அளிப்பதாக மத்திய இணை அமைச்சர் கிரன் ரிஜுஜூ குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி : ஆர்எஸ்எஸ் அமைப்பினரைக் கொல்ல நிதியுதிவி செய்யும் கேரள முதல்வர் பினராயி விஜயனினை அம்பலப்படத்துவோம் என்று மத்திய இணை அமைச்சர் கிரன் ரிஜுஜூ கூறியுள்ளார்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு பாஜக தொண்டர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு வருவதாக அந்த கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதை கண்டித்து பாஜக சார்பில் கேரளா மற்றும் மாநில தலைநகரங்களில் 2 வாரங்களுக்கு பாத யாத்திரை நடத்தப்படுகிறது.
அதன்படி தலைநகர் டெல்லியில் கனாட் பிளேஸில் இருந்து மார்க்சிஸ்ட் தலைமை அலுவலகம் வரை 1.5 கி.மீ. தொலைவுக்கு நேற்று பாஜக பேரணி நடைபெற்றது. அப்போது பேசிய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி முன்னணி ஆட்சிக்கு வந்த பிறகுதான் ஏராளமான பாஜக, ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றார்.
அமித்ஷா குற்றச்சாட்டு
குறிப்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனின் சொந்த மாவட்டமான கண்ணூரில் பாஜக தொண்டர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் விரைவில் பினராயி விஜயனின் உண்மை குணத்தை அம்பலப்படுத்துவோம் என்றும் தெரிவித்தார். மேலும் கேரளாவில் தாமரை மலர்வதை யாராலும் தடுக்க முடியாது என்றும் அமித்ஷா தெரிவித்திருந்தார்.
ஜனநாயக விரோத கேரள அரசு
இந்நிலையில் பினராயி விஜயன் குறித்து அமித்ஷா தெரிவித்ததைப் போலவே மத்திய இணை அமைச்சர் கிரன் ரிஜுஜூவும் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மார்க்சிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் ஆட்சி எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கு ஜனநாயகத்திற்கு பொருந்தாத செயல்களே நடக்கின்றன. பினராயி விஜயன் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மீதான தாக்குதல்களுக்கு நிதியுதவி செய்கிறார். இதை விரைவில் அம்பலப்படுத்துவோம் என்றார்.
பாஜக அஞ்சாது
நேற்று பாஜகவினர் மேற்கொண்ட பேரணி போல டெல்லி கனாட் பிளேஸில் கோலே மார்க்கெட் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் அலுவலகத்தை நோக்கி பேரணியாக வந்த 100க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் தண்ணீரை பீய்ச்சியடைத்து கலையச் செய்தனர். பாஜக யாத்திரையில் பங்கேற்ற வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் கம்யூனிச அரசு கலவரத்தின் மூலம் மக்களை அச்சுறுத்தி பார்ப்பதாக தெரிவித்தார்.
பாஜக விழிப்புணர்வு பேரணி
இதற்கெல்லாம் அஞ்சாமல் தொடர்ந்து பாஜக குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என்றும் விகே சிங் கூறினார். கடந்த 3ம் தேதி கேரளாவின் கண்ணூரில் பாஜக பாதுகாப்பு பேரணியை அமித்ஷா தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.