சோ மறைவு… அரசின் சார்பில் அஞ்சலி செலுத்த கலாச்சார அமைச்சர் மகேஷ் சர்மா சென்னை வருகை
துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ ராமசாமி மறைவிற்கு அஞ்சலி செலுத்த கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா சென்னை வருகிறார்.
டெல்லி: துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ ராமசாமி மறைவிற்கு மத்திய அரசின் சார்பில் அஞ்சலி செலுத்த மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா சென்னை வருகிறார்.
துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த 29ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தொடர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். இதனையடுத்து அவரது உடல் எம்.ஆர்.சி நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இவரது மறைவிற்கு தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். திமுக தலைவர் கருணாநிதி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தேசிய அளவில், சோ ராமசாமி மறைவிற்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்களை தெரிவித்தார். தொடர்ந்து, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் சோவிற்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நிலையில், மத்திய அரசின் சார்பாக சோ ராமசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்த மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் சென்னை வருகிறார். இதுகுறித்த தகவலை அமைச்சர் மகேஷ் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.