புற்று நோய்க்கு மருந்தாகும் கஞ்சா... சட்டப்பூர்வமாக விற்க மேனகா காந்தி பரிந்துரை
புற்றுநோய்க்கு மருந்தாக கஞ்சா பயன்படுவதால், கஞ்சா விற்பனையை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறியுள்ளார்.
டெல்லி : மருத்துவ பயன்பாடுகளுக்கு கஞ்சாவை சட்டப்பூர்வமாக பயன்படுத்த மத்திய அமைச்சர் மேனகா காந்தி பரிந்துரை செய்துள்ளார்.
டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேலாண்மை அமைச்சர் மேனகா காந்தி கஞ்சாவை மருத்துவ காரணங்களுக்கு பயன்படுத்த அனுமதி கேட்டு சட்ட முன்வரைவு ஒன்றை வெளியிட்டார்.
அதை ஆய்வு செய்த அமைச்சர்கள் குழு சிறிய மாற்றங்களை செய்து மருத்துவ சிகிச்சைக்காக கஞ்சாவை மருந்து வடிவில் பயன்படுத்த ஒப்புதல் வழங்கியது. அமைச்சர்களின் இந்த ஒப்புதல் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் மேனகா காந்தி, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கஞ்சா பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதே வரிசையில் இந்தியாவிலும் கஞ்சாவை மருத்துவ சிகிச்சைக்காக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். குறிப்பாக புற்றுநோய் குணப்படுத்துவதில் கஞ்சா முக்கிய பங்கு வகிக்கிறது என்றார்.
நாடு தழுவிய அளவில் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் ரயில் நிலையங்களுக்கு அருகில் வாழும் குழந்தைகள் அதிக அளவில் போதைப்பொருள் பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அப்பகுதியில் அதிக அளவில் போதை மீட்பு மையங்கள் அமைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.