ராஜ்யசபா தேர்தல் : வேட்பு மனு தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!
ஹைதராபாத்: ஆந்திரா ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.
திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன், ஆந்திராவில் வசித்து வருகிறார். பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த அவர் மோடி அமைச்சரவையில் கேபினட் அமைச்சரானார்.
தற்போது எம்.பி.யாக இல்லாத அவர் 6 மாதங்களுக்குள் எம்.பி.யாக வேண்டும். ஆந்திராவில் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த ஜனார்த்த ரெட்டி மறைந்ததால் அங்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இத் தேர்தலில் நிர்மலா சீதாராமன் போட்டியிடுகிறார்.
இதற்கான தேர்தல் ஜூலை 3-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனுவை நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.
175 எம்.எல்.ஏக்களைக் கொண்ட ஆந்திரா சட்டசபையில் தெலுங்குதேசம்- பாஜக கூட்டணிக்கு 107 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் நிர்மலா சீதாராமன் தேர்வாவது உறுதியான ஒன்று.
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிர்மலா சீதாராமன், ராஜ்யசபா தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டேன். தெலுங்குதேசம் கட்சியின் மிகப் பெரிய ஆதரவு இருக்கிறது. எனது பெயரை முன்மொழிந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.