உர இறக்குமதியை குறைக்க "யூரின் வங்கி".. நிதின் கட்கரியின் சூப்பர் ஐடியா!
விவசாயத்துக்கான உரங்களை தயாரிப்பதற்காக சிறுநீர் வங்கிகளை அமைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நித்தின் கட்கரி ஆலோசனை தெரிவித்துள்ளார்
நாக்பூர் : யூரியா இறக்குமதியை குறைக்கும் வகையில் சிறுநீர் வங்கிகளை தாலுகா அளவில் உருவாக்கி அதன் மூலம் உரம் தயாரித்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்யலாம் என்று திட்டமிடப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
தி டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இந்த முடிவு தொடக்க நிலையில் தான் உள்ளது. இந்த திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்று ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றார். ஒவ்வொரு தாசில்/தாலுகாவில் சிறுநீர் வங்கிகள் ஏற்படுத்தப்பட்டு சிறுநீர் சேமிக்கப்படும்.
அதில் இருந்து யூரியா தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு உரமாக அளிக்கப்படும். இதுவே இந்த திட்டத்தின் சாராம்சம், இதன் மூலம் யூரியா இறக்குமதியை குறைக்கலாம் என்பதே என்னுடைய கருத்து
விவசாயிகளின் உதவிக்காக
மனிதர்களின் சிறுநீரில் ஏராளமான நைட்ரஜன் உள்ளது, ஆனால் அவை வீணடிக்கப்படுகிறது. பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியத்திற்கு மாற்றாக இயற்கை உரம் உள்ளது. இதனுடன் நைட்ரஜனை சேர்க்கும் போது விவசாயிகளுக்கு உதவும்.
முதலில் கிராமங்களில்
விவசாயிகளிடம் 10 லிட்டர் கேன்கள் கொடுக்கப்படும் இவற்றில் சிறுநீரை சேகரித்து தாலுகா மையங்களுக்கு அவர்கள் எடுத்து வர வேண்டும். அரசே தனது செலவில் கேன்களை வழங்கும், ஒரு லிட்டர் சிறுநீருக்கு ரூ. 1 விவசாயிக்கு கிடைக்கும்.
இயற்கை உரம் உற்பத்தி
இந்த திட்டத்தை முதலில் கிராமப் பகுதிகளில் செயல்படுத்தலாம் என்று இருக்கிறோம். ஏனெனில் சிறுநீர் தண்ணீருடன் கலந்து கழிப்பறைக்கு செல்லாது. அதனை சுத்தமான இயற்கை உரமாக உற்பத்தி செய்யலாம்.
ஆரம்ப கட்ட சோதனை
இந்த திட்டத்தின் பொருளாதாரம் மற்றும் சாத்தியம் குறித்து என்னால் உறுதியாக சொல்ல முடியாது. இதற்கான ஆரம்ப கட்ட சோதனை நாக்பூரில் உள்ள தண்டேவாடா கிராமத்தில் எனது வீட்டருகே உள்ள ஆய்வகத்தில் நடைபெற்றது என்று கட்கரி தெரிவித்துள்ளார்.