தலை முடியை பிடிச்சு இழுத்தாங்க.. என் மேல கை வச்சாங்க.. மாணவர்களிடம் சிக்கி மீண்ட மத்திய அமைச்சர்!
மத்திய அமைச்சரை பல்கலை மாணவர்கள் சிறைபிடித்தனர்
Recommended Video
கொல்கத்தா: "என் உடம்பு மேல கை வெச்சாங்க.. என் தலைமுடியை பிடிச்சு இழுத்தாங்க.. " என்று ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் இடது சாரி மாணவர் அமைப்பினர் மீது மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோ குற்றஞ்சாட்டி உள்ளார்.
கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் சார்பில் ஒரு கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் பபுல் சுப்ரியோ வந்திருந்தார். இவர் ஒரு பின்னணி பாடகரும் கூட.
ஆனால், பல்கலைக்கழக நுழைவாயிலில் அமைச்சர் நுழைந்ததுமே இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். பல்கலைக்கழகத்துக்கு உள்ளேயே அனுமதிக்க மாட்டோம் என்று முழக்கமிட்டனர்.
எச்சரித்தார்
விஷயம் தெரிந்ததும் பல்கலைக் கழக துணைவேந்தர் விரைந்து மாணவர்களை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் மாணவர்கள் துணைவேந்தரை தகாத வார்த்தைகளால் திட்டினர். ஒரு சில மாணவர்கள் அமைச்சரை தாக்குவதை போல வந்தனர். அதற்கு அமைச்சர், "என் உடம்பு மேல கை வைக்காதீங்க" என்று எச்சரித்தார்.
சுற்றி வளைப்பு
ஆனாலும், சில மாணவர்கள் அவரை தள்ளுவதும், பிடித்து இழுப்பதுமாக இருந்ததில், ஒருமுறை அமைச்சர் கீழே விழுந்தும் விட்டார். இறுதியில் பாதுகாப்பு போலீசாரின் உதவியுடன் உள்ளே நுழைந்து விழாவில் கலந்து கொண்டு பேசிவிட்டு, வெளியே வளாகத்துக்கு வந்தார். அவ்வளவுதான்.. அனைத்து மாணவர்களும் அவரை சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர்.
சமாதானம்
மாணவர்கள் இப்படி சிறைபிடித்து விடுவார்கள் என்று அமைச்சர் கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை. அங்கிருந்து நகர்ந்து செல்லவும் வழி இல்லை. அவரது காரை எடுக்க முடியாத அளவுக்கும் மாணவர்கள் தடையை உருவாக்கினர். பாதுகாப்புக்கு வந்திருந்த போலீஸாரும் மாணவர்களை கன்ட்ரோல் செய்யவே முடியவில்லை. மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முழக்கமிட்ட மாணவர்களை எப்படியாவது சமாதானம் செய்ய முயன்றார் அமைச்சர். ஆனாலும் அதுவும் முடியவில்லை.
உத்தரவு
இப்படி மத்திய அமைச்சர் பல்கலைக்கழகத்தில் சிறைபிடிக்கப்பட்டு விட்டார் என்ற தகவல் மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தங்கருக்கு எட்டியது. உடனடியாக தலைமைச் செயலரைத் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அப்போதும் அவர் விடவில்லை.. போலீஸை அழைத்து கொண்டு பல்கலைக்கழகத்துக்கே நேரில் வந்துவிட்டார்.
பரபரப்பு
ஆனால் ஆளுநர் என்றும் மாணவர்கள் பார்க்கவில்லையே.. அவரை காரைவிட்டே கீழே இறங்க அனுமதிக்கவில்லை. நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு, கடுமையான முயற்சிக்கு பிறகு.. போலீஸார் உதவியுடன் அமைச்சரிடம் நெருங்கிய ஆளுநர் கடைசியாக தன்னுடைய காருக்குக் கொண்டுவந்தார். கிட்டத்தட்ட 2 மணி நேரம் இப்படி ஒரு பரபரப்பு அங்கு ஏற்பட்டது.
ஒழுங்கீனம்
இது குறித்து சுப்ரியோ செய்தியாளர்களிடம் பல்கலைகழக வளாகத்தில் சொல்லும்போது, "நான் இங்கு அரசியல் பேச வரவில்லை. ஒரு பாடகராகத்தான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். ஆனால், இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் என் தலைமுடியைப் பிடித்து இழுத்தனர். என்னை தொடாதீங்க என்று சொல்லியும், ரொம்ப ஒழுங்கீனமாகவும், என்னைத் தொட்டு பிடித்து இழுத்தும் அவமானப்படுத்தினர்" என்று குற்றஞ்சாட்டினார்.
ஆவேசம்
ஆனால், இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த மாணவர்களோ, "இந்த பல்கலைக்கழகத்தை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போல மாத்தணும் என்று ஏபிவிபி முயற்சி செய்கிறது. ஆனால் அது நாங்க இருக்கும் வரைக்கும் அது நடக்காது" என்று ஆவேசமாக தெரிவித்தனர்.